தலைதுாக்கிய குடிநீர் பிரச்னை ஒன்றிய அலுவலகம் முற்றுகை
பொங்கலுார்: குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனுார், சிங்கனுார்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த இரண்டு வாரங்களாக அத்திக்கடவு குடிநீர் வரவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலர், பி.டி.ஓ., உள்ளிட்டவர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பி.டி.ஓ., வாகனத்தை சிறை பிடித்தனர். பி.டி.ஓ., ஜோதி, அத்திக்கடவு திட்ட உதவிப் பொறியாளர் ஜெயஸ்ரீ பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.