அறம் சார்ந்த வாழ்க்கை மேம்படுத்தும் கல்விமுறை - காலத்தின் கட்டாயம்
பழனிசாமி, முன்னாள் மாநில துணைத்தலைவர், தேசிய ஆசிரியர் சங்கம்: மெக்காலே கல்வி முறை என்பது வெறும் கிளார்க்குகளை உருவாக்கும் கல்விமுறை. இந்தக் கல்வி முறை வருவதற்கு முன்பே, நம் நாட்டில் லட்சக் கணக்கில் குருகுலங்கள் இருந்தன. அனைவருக்கும் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்தியர்களின் பல்துறை அறிவு
நாலந்தா - தட்சசீலா - காஞ்சிக் கடிகை போன்ற பல்கலைக்கழகங்களில், நமது நாட்டினர் மட்டுமின்றி, சீனா உள்ளிட்ட மேலை நாடுகளில் இருந்து வந்து தங்கி, இந்தியர்களின் அறிவுச் செல்வங்களை படித்துச் சென்று இருக்கின்றனர். நம் பல்துறை அறிவை வியந்து போற்றியிருக்கின்றனர்.வானவியல், கணிதவியல், கட்டடக்கலை, சிற்பக்கலை நம் நாட்டினர் முன்னோடிகளாக இருந்தனர். கணித எண்முறை இனத்தில், பூஜ்ஜியத்தை கண்டுபிடித்து, தசம எண்முறையியலுக்கு வித்திட்டவர்கள், இந்தியர்கள். இவை எல்லாம் நடந்தது ஆங்கிலேயர் வருகைக்கு முன். கரிகாலன் கட்டி வைத்த கல்லணை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் இன்றளவும் அப்படியே உள்ளது.கணித தொழில்நுட்பம் எல்லாம் பரவலாக கல்வியறிவு இல்லாமல் இருந்திருந்தால், எப்படி சாத்தியப்பட்டிருக்கும்? தமிழகம் மட்டுமின்றி, நம் நாட்டில், பல்வேறு பகுதியில் உள்ள சிற்பங்கள் இந்தியர்களின் கட்டடக்கலையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.சோழர் கால பஞ்சலோக சிற்பக்கலையை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், இன்று பாலங்கள் கட்டினால் ஒரு மாதத்தில் இடிகிறது. அன்றைய கால கட்டத்தில் உழைப்பே உயர்வாக மதிக்கப்பட்டதால், புலவர்கள் வறுமையில் வாடினர். கற்றவர் வறுமையில் வாடினர் என்பதால் தான் கல்வி பரவலாக இல்லை. இயற்கையோடு இயைந்த வாழ்வியல்
அன்றைய கல்வி முறை வாழ்வியலோடு முழுமையாக பயன்படுத்த முடிந்ததாக இருந்தது; மனிதனை இயற்கையோடு இயந்த வாழ்க்கையை கற்றுக்கொடுத்தது. ஆனால், இன்றைய கல்வி முறை கணிதம், அறிவியல், கணினி கற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதே தவிர, வாழ்வியலோடு பயன்படுத்துவதற்கான, அன்றாட வாழ்வில் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதற்காக எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதாக இல்லை.அன்றைய குருமார்கள் மாணவர்களோடு வாழ்க்கைக்கு முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இன்றைய கல்விமுறையில் ஆசிரியர்களால் அப்படிப்பட்ட பொறுப்பை ஏற்க முடியுமா? அறவழியில் நடப்பதை விட்டுவிட்டு, பணத்தை துரத்தும் பண்பாடற்ற கல்வி முறையாக இருக்கிறது. மதிப்பெண்கள் துரத்தும் வேகத்தில் மதிப்பு மிக்க வாழ்க்கை போதிக்காத கல்விமுறையாக இருக்கிறது. தனிமனித சுதந்திரம் என்ற பெயரில், தனிமனித ஒழுக்கத்தை காற்றில் விடும் கல்விமுறையாக உள்ளது. நமது வேர்களை மறக்கடித்து, பண்பாட்டை தொலைக்கும் கல்வி முறையாக உள்ளது. இது மாற வேண்டும்; மாற்றியாக வேண்டும்!இன்றைய கல்வி முறை கணிதம், அறிவியல், கணினி கற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதே தவிர, வாழ்வியலோடு பயன்படுத்துவதற்கான, அன்றாட வாழ்வில் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதற்காக எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதாக இல்லை.