மொத்த வியாபாரிகளை குறிவைத்து மெகா மோசடி; மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை பாயுமா?
திருப்பூர்:பல்லடத்தில், மொத்த வியாபாரியிடம், பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முந்திரியை பெற்று மோசடியில் ஈடுபட்ட கோவை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பல்லடத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம், கோவையை சேர்ந்த ஜெமீஷா, 34 என்பவர், பத்து லட்சம் ரூபாய்க்கு, ஒன்றரை டன் முந்திரி பருப்பை கொள்முதல் செய்தது. வியாபாரிக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றினார். இதுதொடர்பாக வியாபாரி விசாரித்த போது, ஜெமீஷா, நாமக்கல், திருவண்ணாமலை போன்ற இடங்களில் இதே போன்று சிறிய தொகையை முன்பணமாக கொடுத்து விட்டு, பொருள்களை வாங்கிய பின், மீதி பணத்தை தராமல் மோசடியில் ஈடுபடுவது தெரிந்தது. மோசடி தொடர்பான புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.கடந்த வாரம் தனிப்படை போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஜெமீஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி குறித்து விசாரிக்க அவரை ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். மொத்த வியாபாரிகளை குறி வைத்து, வாங்கும் பொருட்களின் விலையை அதிகமாக விலை பேசி வாங்கிய பின், அந்த பொருட்களை வெளியில் விற்று கொண்டு, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். திருவண்ணாமலையில், 12 லட்சம் ரூபாய், நாமக்கல்லில், நான்கு லட்சம் ரூபாய் ஏமாற்றினார். அங்கு கொடுக்கப்பட்ட புகார்களில் போலீசார் அழைத்து விசாரித்தது தெரிந்தது. ''மோசடியில் தொடர்புடைய கும்பல் தமிழகம் முழுவதும் 'நெட்வொர்க்' கொண்டிருக்கிறது; ஏமாற்றப்படும் வியாபாரிகள் மிரட்டப்படுவதால், பலர் புகார் கொடுப்பதில்லை'' என்கிறார்கள் மொத்த வியாபாரிகள் சிலர்.மோசடியில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.---
போலீசார் கூறியதாவது:
ஏலக்காய், முந்திரி, கோதுமை, மைதாமாவு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளை நோட்டமிட்டு இதுபோன்ற நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். வியாபாரிகளை நம்ப வைக்க அலுவலகம் அமைத்து, ஜி.எஸ்.டி.,யுடன் மற்றும் முன் பணம் அளித்து பொருட்களை வாங்குகின்றனர். அதன்பின், மீதி தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை வாடிக்கைய கொண்டுள்ளனர். வியாபாரியின் ஆசையை, மூலதனமாக பயன்படுத்தி கொள்கின்றனர். பத்து லட்சம் ரூபாய்க்கு விற்கும் பொருளை அதிக விலைக்கு கேட்கின்றனர். இதனை நம்பி அவர்களுக்கு கொடுக்கும் போது ஏமாற்றி விடுகின்றனர். எனவே, எந்த ஒரு வியாபாரத்தை மேற்கொள்ளும் முன், வியாபாரிகள் கவனமாக, அதிகளவில் கொள்முதல் செய்வோரின் பின்புலத்தை ஆராய்ந்து வியபாாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.