1,186 மது பாட்டில் பறிமுதல்; பார் மேலாளர் கைது
திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர் பந்தல் திலகர் நகரில் 'கிரீன் பார்க்' என்ற மதுபான பார் இயங்கி வருகிறது. ரசீது இன்றி, முறைகேடாக மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து, திருப்பூர் மாநகர மதுவிலக்கு உதவி கமிஷனர் செங்குட்டுவன், இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு பாரில் சோதனை செய்தனர். மதுபாட்டில்களுக்கான 'பில்' இல்லாமல் இருந்தது. 'டாஸ்மாக்' மற்றும் வேறு பார்களில் முறைகேடாக மதுபாட்டில்களை கொள்முதல் செய்து விற்றுவந்தது தெரிந்தது.மொத்தம் 1,186 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலாளர் சிலம்பரசன், 32 கைது செய்யப்பட்டார். உரிமையாளர் ராஜேஷ்குமாரை தேடி வருகின்றனர்.