208 கிலோ குட்கா கடத்தல்; துணி வியாபாரி கைது
திருப்பூர்; பெங்களூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுார் வழியாக கோவைக்கு குட்கா கடத்தி வருவது குறித்து பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பிரசன்னா தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கை செய்தனர். சந்தேகப்படும் வகையில், கோவை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், குட்கா மூட்டைகள் இருப்பது தெரிந்தது. காரை ஓட்டி வந்த திருப்பூர் - குமரானந்தபுரத்தை சேர்ந்த நந்தகுமார், 27 என்பதும், துணி வியாபாரியான இவர், பெங்களூரில் இருந்து கோவைக்கு 'குட்கா' கடத்துவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 208 கிலோ குட்கா, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.