உடுமலையில் ஜீப் - வேன் மோதி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
உடுமலை:திண்டுக்கல் மாவட்டம், பழனி, இந்திரா நகரை சேர்ந்தவர் தியாகராஜன், 45, பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்தார். அவரது மனைவி பிரீத்தி, 40, மகன்கள் ஜீவப்பிரியன், 13, ஜெயப்பிரியன், 11, மற்றும் தந்தை நாட்ராயன், 75, தாய் மனோன்மணி, 65, ஆகிய ஆறு பேரும், நேற்று முன்தினம், கோவை - கிணத்துக்கடவு அருகே, உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.பின், இரவு 10:00 மணிக்கு அங்கிருந்து கிளம்பி, 'பொலீரோ' ஜீப்பில், புதிதாக அமைக்கப்படும், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், கருப்புச்சாமி புதுார் அருகே சென்று கொண்டிருந்த போது, மதுரையிலிருந்து கேரள மாநிலம், பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்த, 'டெம்போ டிராவலர்' வேன், இவர்களின் ஜீப் மீது நேருக்கு நேர் மோதியது.இதில், ஜீப் முழுதும் நொறுங்கி, அதில் பயணித்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கதறினர். சுற்றுலா வேனும் மோதிய வேகத்தில் கவிழ்ந்தது.அவ்வழியே வந்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் மடத்துக்குளம் போலீசார், வாகனத்திற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே தியாகராஜன், மனைவி பிரீத்தி, மகன் ஜெயபிரியன், தாய் மனோன்மணி ஆகியோர் பலியாயினர்.தந்தை நாட்ராயன், இன்னொரு மகன் ஜீவப்பிரியன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிர் பலி வாங்கும் ரோடு
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணி, கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதில், திண்டுக்கல் - பழநி - மடத்துக்குளம் வரை பணி நிறைவடைந்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கும் திறக்கப்பட்டு, வாகனங்களுக்கு சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.ஆனால், மடத்துக்குளம் - உடுமலை - பொள்ளாச்சி பகுதியில், பகுதி பகுதியாக பணி நடக்கிறது. சுங்க கட்டண சாலை என்ற அடிப்படையில், வாகனங்கள் வரும் நிலையில், அரை குறை வேலை காரணமாக, தொடர்ந்து வாகன விபத்துகளும், 30க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் நடந்துள்ளன. விபத்தை தடுக்க ஒரு கட்டத்தில் மடத்துக்குளம் பகுதியில், ரோடு மூடப்பட்டது. எனினும், ஒரு மாதத்திற்கு முன், சட்ட விரோதமாக கேரளாவுக்கு கனிம வளம் கடத்தும் லாரிகள் செல்வதற்காக, முழுமையாக பணி முடியாத நிலையில், ரோடு திறக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில், நான்கு வழிச்சாலைக்கு பதில், இரு வழிச்சாலை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதை அறியாமல் நேர் எதிரே வந்த சுற்றுலா வாகனம், ஜீப் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.