பி.ஏ.பி.,-ல் நீக்க வேண்டிய 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்
பல்லடம்; பல்லடம் நீர் செறிவூட்டும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் கூறியதாவது:பி.ஏ.பி., திட்டத்தில் தற்போது, 3.72 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைந்து வருகின்றன. நகரமயமாக்கம், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கம் என, பல்வேறு காரணங்களால், பாசன பரப்பளவு படிப்படியாக குறைந்தது. திருப்பூர் மாநகர எல்லையில் மட்டும், 15 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் நீக்கப்பட வேண்டியவையாக உள்ளன. மாவட்டம் முழுவதும், 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீக்கப்பட வேண்டிய பட்டியலில் உள்ளன. பல்லடம் வறட்சி மிக்க பகுதியாக உள்ளது. இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம், ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. எண்ணற்ற விவசாயிகள், பாசன வசதி இல்லாமல் தவித்து வரும் நிலையில், பாசனத்துக்கான தண்ணீர் மாற்று பயன்பாட்டுக்கு செல்வது வேதனைக்குரியதாக உள்ளது.தேவையின்றி சென்று வரும் தண்ணீரை, பாசன பகுதிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.