உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாக்கத்தில் பிரிந்த தாய் - மகன் உயிர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தந்தை மனசாட்சியற்ற அரக்கர்களின் கோரதாண்டவம்

துாக்கத்தில் பிரிந்த தாய் - மகன் உயிர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தந்தை மனசாட்சியற்ற அரக்கர்களின் கோரதாண்டவம்

சமீப காலமாக கொங்கு மண்டலத்தில் நடக்கும் கொடூர கொலைகள், பொதுமக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்துள்ளனர். மனசாட்சியற்ற அரக்கர்கள் நிகழ்த்திய கோரதாண்டவத்துக்கு அப்பாவி உயிர்கள் நொடிப்பொழுதில் கொடூரமாக பறிக்கப்பட்டன.கடந்த ஆண்டு, செப்., மாதம், பல்லடம் கள்ளங்கிணறு கிராமத்தில் பகுதியில் குடும்பத்தை சேர்ந்த, நான்கு பேரை ஆடு, மாடுகளை வெட்வது போல் வெட்டி சாய்த்த கொடூரத்தின் ரணம் ஆறும் முன், மீண்டும் ஒரு கொடூரம் கொலை பல்லடம் அருகே அரங்கேறியுள்ளது. சேமலைக் கவுண்டம்பாளையத்தில் தெய்வசிகாமணி, அலமேலு, செந்தில்குமார் ஆகியோரின் படுகொலை கொள்ளைக்காகவா, முன்விரோதம் காரணமாகவா எனபது தெரியவில்லை. ஆனால், ரத்தம் பாய்ந்து, முகங்கள் சிதைந்து சடலங்களாக கிடப்பவர்களை பார்க்கும் போது, துளியும் கூட மனிதநேயம் துளியுமற்ற மாபாதர்களின் கொடுஞ்செயல், நெஞ்சை பதற வைக்கிறது.போன் சிக்னல் கண்காணிப்புபோலீசார் கூறியதாவது:தோட்டத்தில் வேலை செய்த ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. ஆனால், அதில் முன்னேற்றம் இல்லை. கொலை நடந்த இடம், தோட்டத்து வீடு, தார் ரோட்டில் இருந்து, 400 முதல், 500 மீட்டர் துாரத்துக்கு மண் ரோட்டில் உள்ளே செல்ல வேண்டும். கொலை நள்ளிரவு, 2:00 மணியளவில் நடந்திருக்க வேண்டும். அக்கம்பக்கத்தில் விசாரித்த போது, 2:00 மணியளவில் வீட்டு நாய் குரைக்கும் சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். நாய் தொடர்ச்சியாக குரைக்கவே, தந்தை தெய்வசிகாமணி, சத்தத்தை கேட்டு வெளியே வந்திருக்க வேண்டும்.இதனால், அவரை தாக்கி விட்டு, வீட்டுக்குள் சென்று தாய், மகனை தாக்கி கொன்றிருக்க வேண்டும். மூவரின் உடல் பகுதியில், பிரதானமாக தலை, முகம் பகுதியில் மட்டுமே கடுமையாக கூர்மையான ஆயுதங்கள் மூலம் தாக்கியிருக்க வேண்டும். வீட்டில் பொருள்கள் கலைந்து கிடப்பது, அலமேலு கழுத்தில் அணிந்திருந்த நகை மாயமானது என, அனைத்தும் கொள்ளைக்காக நடந்த கொலையாக திசை திருப்ப செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.முன்விரோதம் காரணமாக ஏதாவது நடந்ததா என்று, இவர்களின் குடும்பத்தாருக்கு பின்னணியில் பிரச்னை உள்ளதா என்று விசாரணை நடக்கிறது. வயதான தம்பதி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, பின் வீட்டுக்கு வந்த போது மகன் இருந்த காரணத்தால் மாட்டி கொள்வோம் என்று நினைத்து கொலை செய்தார்களா சந்தேகமும் ஏற்படுகிறது. முதல் கட்ட விசாரணைக்கு பின், கொலையில் ஈடுபட்டவர்கள் ஒன்றிரண்டு பேருக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஒரே மாதிரியான சம்பவம்?

பொங்கலுார் அருகே நடந்த மூன்று பேர் கொடூர கொலை, இதற்கு முன், காங்கயம், சென்னிமலையில் நடந்த கொலைகள் போன்றே, முகம் சிதைத்து, பண்ணை வீடு, வயதான தம்பதி இருப்பது போன்ற சில ஒற்றுமையாக உள்ளது. இதற்கு முன் நடந்த கொலைகளும் வார இறுதி நாட்கள் இல்லாமல், இடைநாட்களில் நடந்துள்ளது. 'சிசிடிவி' கேமராக்கள் இல்லாமல், தோட்டத்து வீட்டையொட்டி சில கிலோ மீட்டர் துாரத்துக்குள் வாய்க்கால், ஆறு போன்ற நீர்நிலைகள் அமைந்துள்ளது. தற்போது நடந்த கொலையிலும் கூட, தோட்டத்து வீட்டில் இருந்து, ஒரு கிலோ மீட்டருக்குள் பி.ஏ.பி., வாய்க்கால் உள்ளது. எனவே, பல கொடூர கொலைகளின் 'எம்.ஓ.,' வை ஒப்பிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். - நமது நிருபர்கள் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ