கலெக்டர் அலுவலகத்தில் மயங்கிய பெண்ணால் பரபரப்பு
திருப்பூர்; மாயமான கணவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி, பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண் மயங்கி விழுந்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதையொட்டி, நுழைவாயிலில் பலத்த சோதனைக்கு பின், போலீசார் உள்ளே அனுமதித்தனர். அவ்வகையில், பெண் ஒருவரை போலீசார் சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த பையில், பெட்ரோல் கேன் இருந்ததால் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர், பூலுவப்பட்டி அருகில், அம்மன் நகரை சேர்ந்த நந்தினி என்பது தெரிந்தது. மாயமான கணவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி மனு கொடுக்க வந்தது தெரிந்தது. இதனையடுத்து, கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற பெண் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே, அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்து, விசாரித்த போது, நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அப்பெண் பிரவீன் என்பவரை திருமணம் செய்து, குடும்பம் நடத்தியுள்ளார். பெண் வைத்திருந்த நகை, பணத்துடன் கணவர் மாயமானதும், அவரை கண்டுபிடித்து தர மனு கொடுக்க வந்ததும் தெரிந்தது.