நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிலை மெருகேற்ற அட்வைஸ்
பல்லடம்; 'நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொழிலை மெருகேற்றுங்கள்,' என, பல்லடத்தில் நடந்த எம்.எஸ்.எம்.இ., குறித்த கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.பல்லடம் வனம் அமைப்பு, சென்னை சீ சேன்ஜ் கன்சல்டிங் மற்றும் திருப்பூர் பொதிகை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம் ஆகியவற்றின் சார்பில், சிறு குறு தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான கருத்தரங்கம் பல்லடம் வனாலயம் வளாகத்தில் நடந்தது. வனம் அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார்.பொதிகை மனிதவள மேம்பாட்டு மையத்தின் தலைமை பயிற்சியாளர் ஆனந்த் பேசியதாவது:நம் நாட்டில், 19 ஆயிரம் பெரு நிறுவனங்களும், 7 கோடி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதில், எம்.எஸ்.எம்.இ., எனப்படும் தொழில் நிறுவனங்கள், 12 கோடி பேருக்கு நேரடியாகவும், 26 கோடி பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு தருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில், இத்துறையின் பங்கு, 30 சதவீதமாக உள்ளது. விவசாயத்துக்கு அடுத்து மிகப்பெரிய துறையான இது அதிக சவால்களை சந்தித்து வருகிறது.சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை கையாண்டால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நிலையை எட்டும் என்பதில் ஐயமில்லை. நாட்டில், 7 கோடி நிறுவனங்களில், 99.99 சதவீத நிறுவனங்கள், 5 கோடி ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வர்த்தகம் புரியும் நிறுவனங்களாக உள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள், ஐந்து ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சியும் இன்றி குறைவான லாபத்திலேயே இயங்குகின்றன.வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொழிலை நாளுக்கு நாள் மெருகேற்ற வேண்டும். அப்போதுதான், எந்த ஒரு நிறுவனமும் போட்டிகளை சமாளித்து சந்தையில் தன்னை நிலை நிறுத்த முடியும். இதற்காகவே, அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதியை ஒதுக்குகிறது. வளர்ச்சி வேகத்துக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளாத நிறுவனங்கள் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என்பது கடந்த கால அனுபவமாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.பொதிகை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மைய நிறுவனர் சுந்தரேசன் கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.