உடுமலை:கொண்டைக்கடலை, கொத்தமல்லி உள்ளிட்ட மானாவாரி சாகுபடியில், ஆண்டுதோறும் நஷ்டத்தை சந்தித்தும், அரசு கண்டுகொள்ளாததால், பல ஆயிரம் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரியாக சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக, கொண்டைக்கடலை, கொத்தமல்லி, மொச்சை, சோளம், எள் உள்ளிட்ட சாகுபடிகளை பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர்.வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, விதைப்பு செய்யப்பட்ட இச்சாகுபடியில், போதிய மழை இல்லாததால், முளைப்பு பாதிக்கப்பட்டது; குறைவாக முளைத்த செடிகளிலும், பருவம் தவறிய மழையால், பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் முற்றிலுமாக பாதித்தது.கொண்டைக்கடலையில், வழக்கமாக, ஏக்கருக்கு, 700 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும்; ஆனால், நடப்பாண்டு, செடியின் பூ பிடிக்கும் தருணத்தில், பெய்த மழையால், பூக்கள் உதிர்ந்தது; பனிப்பொழிவும் முறையாக இல்லை.இதனால், 300 கிலோ கூட விளைச்சல் இல்லை. இவ்வாறு, ஆண்டுதோறும், மானாவாரி சாகுபடியில், பாதிப்பு ஏற்பட்டும், தமிழக அரசு இச்சாகுபடி விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை.முன்பு, வறட்சி மற்றும் மழையினால், மானாவாரி சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் போது, வி.ஏ.ஓ., மற்றும் வேளாண்துறை வாயிலாக கிராமம்தோறும் கணக்கெடுப்பு நடத்தப்படும்.பரிந்துரை அடிப்படையில், நிவாரணமும் கிடைக்கும். இது மானாவாரி விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மானாவாரி விவசாயிகளின் பிரச்னையை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை; நிவாரணமும் வழங்குவதில்லை.காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. இதனால், மானாவாரி சாகுபடி விவசாயிகள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.