சமரச மையத்தில் முறையீடு மாவட்ட நீதிபதி அழைப்பு
திருப்பூர் : கோர்ட்களில் நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்வு காண சமரச மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி குணசேகரன் அறிக்கை:திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் மற்றும் அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய கோர்ட்களிலும் சமரச மையம் செயல்படுகிறது. நீண்ட நாள் நிலுவையில் உள்ள குடும்ப நல வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், வர்த்தக வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், அனைத்து சிவில் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் ஆகியன குறித்து இம்மையங்கள் வாயிலாக தீர்வு காணலாம்.நேரடியாகவும், வக்கீல் மூலமாகவும் நிலுவையில் உள்ள வழக்குகளை இம்மையத்துக்கு அனுப்ப கோரலாம். இதில் நேரடியாக எதிர்தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி, சமரசர் முன்னிலையில் தீர்வு காணலாம். சமரசம் ஏற்படாவிட்டால் மீண்டும் கோர்ட்டை நாடலாம். தீர்வு ஏற்படுத்தி விட்டால் மேல் முறையீடு செய்ய முடியாது. வரும் செப்., 30ம் தேதி வரை இம்மையங்கள் செயல்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த மையம் செயல்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.