அவிநாசி மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சை இல்லை! விபத்தில் மகனை பறிகொடுத்த தாய் புகார்
திருப்பூர்; 'அவிநாசி அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை இல்லாததால், உயிரிழப்பு அதிகரிக்கிறது; தீர்வு காண வேண்டும்' என, விபத்தில் மகனை பறிகொடுத்த தாய், கலெக்டரிடம் மனு வழங்கினார். அவிநாசி, கங்கவர் வீதியில் வசிக்கும் நவநீத குணவதி, கலெக்டரிடம் வழங்கிய மனு: கடந்த, 26ம் தேதி, எனது மகன் ஹரிஸ் வரன், அவிநாசி தாலுகா அலுவலக சாலையில் இடதுபுறம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்து இறந்தார். படுகாயமடைந்த நிலையில், அவனை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பணியில் இருந்த மருத்துவர் அலட்சியமாக செயல்பட்டார். அவிநாசி அரசு மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட உரிய மருத்துவ சிகிச்சைகள், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் இல்லை. இதனால், அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எந்தவொரு சிறிய சிகிச்சை என்றாலும், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். இந்த விபத்து நடந்ததன் எதிரொலியாக, அவிநாசி தாலுகா அலுவலக ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றியது போல், அவிநாசி அரசு மருத்துவமனையிலும் உயிர்காக்கும் மருத்துவ கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். என் மகனுக்கு வழங்கப்பட்ட முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.