உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு தொடர்கிறது : அதிகாரிகள் சைலன்ட் மோட்

பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு தொடர்கிறது : அதிகாரிகள் சைலன்ட் மோட்

பல்லடம்: பரம்பிக்குளம் -ஆழியாறு பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி.,யில் தொடர்ந்து நடக்கும் நீர் திருட்டு காரணமாக, கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பல்லடம், பொங்கலுார், குண்டடம், காங்கேயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பி.ஏ.பி., சார்ந்த பகுதிகள் அனைத்தும் வறட்சி மிகுந்தவை. பி.ஏ.பி.,யில் திட்டமிட்டபடி, தேவையான காலகட்டங்களில் தண்ணீர் திறந்தால் மட்டுமே, இப்பகுதியின் பாசனங்கள் தப்பிக்கும் என்ற நிலை உள்ளது. தண்ணீர் திருட்டு காரணமாக, கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுவதால், எண்ணற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பாசன சபை நிர்வாகிகளே, தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக கூறி, சமீபத்தில், குண்டடம் பகுதி விவசாயிகள் பலர், பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நீர் இழப்பு மற்றும் தண்ணீர் திருட்டு ஆகியவையே, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதேபோல், வாவிபாளையம் பகுதியிலும் சிலர் குழாய் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, பாசன சபை நிர்வாகிகள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக, குண்டடம் பகுதியில் மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வாறு, தண்ணீர் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன. இதற்கு, பாசன சபை நிர்வாகிகள் உட்பட அரசியல் கட்சியினரும் உறுதுணையாக இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் தலையீடுகள் இன்றி, அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !