உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமை

குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமை

'குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்' எனற நோக்கில், ஆண்டுதோறும், ஜூன், 12ம் தேதி 'உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டின் கருப்பொருள், 'குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையில் முன்னேற்றம் தெரிகிறது; ஆனால், இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது; முயற்சிகளை விரைவுபடுத்துவோம்' என்பதே.ஏழ்மை, கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை போன்றவை தான், குழந்தை தொழிலாளர்களை உருவாக்குகிறது; கல்வி கற்க வேண்டிய வயதில் வேலைக்கு செல்வதால், குடும்பத்தின் அப்போதைக்கான பொருளாதார தேவை பூர்த்தியடையலாம். ஆனால், குழந்தைகளின் எதிர்காலம் வீணாகி விடும்.

பணிபுரியும் குழந்தைகள்எதிர்காலம் கேள்விக்குறி

மத்திய அரசு இயற்றியுள்ள புதிய சட்டப்படி, 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்துவது, தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை. கல்வி கற்க வேண்டிய வயதில், குழந்தைகள் வேலைக்குச் செல்வதால், அவர்களது உடல், மனம் பாதிக்கப்படுவதுடன், எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

வளரிளம் பருவத்தினருக்கு6 மணி நேரமே பணி

14 முதல், 18 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரை நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தும் போது, 6 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது; 3 மணி நேரத்துக்கு பின், ஒரு மணி நேரம் ஓய்வு அளிக்க வேண்டும். இரவு 7:00 மணிக்கு பின்னும், காலை 8:00 மணிக்கு முன்பும் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. 'ஓவர் டைம்' வேலை வழங்கக்கூடாது. ஒரே சமயத்தில் இரு நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது. வாரத்தில் ஒரு நாள் முழு வார விடுமுறை வழங்க வேண்டும்.நிறுவனத்தில் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் தேதியில் இருந்து, 30 நாட்களுக்குள் நிறுவன உரிமையாளர் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் தொழில் அல்லது செய்முறை தன்மை ஆகிய விபரங்களை தொடர்புடைய தொழிலாளர் ஆய்வாளர் அல்லது தொழிலக பாதுகாப்பு மற்றும் மற்றும் சுகாதார இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத சூழலை உருவாக்க தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.இன்று(ஜூன் 12) குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்.

அபராதம், சிறைத்தண்டனை

அனைத்து குழந்தைகளுக்கும், கல்வி கிடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் மத்திய அரசு, பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகள், கல்வி கற்பதற்குரிய அனைத்து வாய்ப்புகளையும், முற்றிலும் இலவசமாக, மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இச்சட்டத்திற்கு புறம்பாக, பணியமர்த்துபவர்களுக்கு, அபராதம் மற்றும் 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள், பீடி தயாரிப்பு நிறுவனங்கள், வீட்டு வேலை, பண்ணை வேலை, மருந்துக்கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.- தொழிலாளர் துறை.

கற்கும் சூழல் சிறப்பு தமிழகத்தை பொறுத்தவரை குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, வெகுவாக குறைந்திருக்கிறது. 14 வயதுக்குட்பட்டவர்கள், குழந்தைகள் என, சட்டம் கூறினாலும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை குழந்தைகள் என, கொள்கை ரீதியாக தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது. முற்றிலும் இலவசக் கல்வி, கல்லுாரி சென்று படிப்போருக்கு, 1,000 ஊக்கத் தொகை மற்றும் இடைநிற்கும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, கல்வியை தொடர வைப்பது உள்ளிட்ட பணிகளில் மாநில அரசின் நடவடிக்கையால், குழந்தை தொழிலாளர்கள் வெகுவாக குறைந்திருக்கின்றனர். இருப்பினும், திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில், வளரிளம் குழந்தைகளை விடுதிகளில் தங்க வைத்து, நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தி வருகின்றன. இவர்கள் குறித்த தெளிவான புள்ளிவிபரம் சேகரிக்கப்பட வேண்டும்.

- நம்பி, நிறுவனர், சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ