உடுமலை: அரசு மருத்துவமனை ரோட்டில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது. உடுமலை அரசு மருத்துவமனை, வ.உ.சி., வீதியில், அமைந்துள்ளது. குறுகலான ரோட்டில், அமைந்துள்ள மருத்துவமனைக்கு, நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், விபத்து உட்பட அவசர சிகிச்சைக்கு அழைத்து வரவும், முதலுதவிக்குப்பிறகு, கோவை உட்பட மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்கு அழைத்துச்செல்லவும், ஆம்புலன்ஸ்கள் குறுகலான ரோட்டின் வழியாகவே செல்ல வேண்டும். மருத்துவமனை அருகிலுள்ள, கச்சேரி வீதியில், சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என வரிசையாக, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. எனவே, அந்த ரோட்டில், எப்போதும் நெரிசல் இருக்கும். இந்நிலையில், தற்போது அரசு மருத்துவமனை முன்பு, குறுகலான இடத்தில், இருபுறங்களிலும், கார் உட்பட நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால், ஆம்புலன்ஸ் உட்பட அவரசமாக செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி கொள்கின்றன. பிற வாகனங்களும், அரசு மருத்துவமனையை கடந்து செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனையை ஒட்டி, ரோட்டின் இருபுறங்களிலும், வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, உரிய அறிவிப்பு பலகைகள் வைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுத்தால், பல்வேறு பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.