உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சந்தை வளாகத்தில் கட்டுமான பணி இழுபறி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சந்தை வளாகத்தில் கட்டுமான பணி இழுபறி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்

உடுமலை ; உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில், கடைகள் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணியை முழுமையாக நிறைவு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.உடுமலை நகராட்சி, சந்தை வளாகம், 6.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தர கடைகள் உள்ளன.உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும், 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது.உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர்.மேலும், இங்கு செயல்படும் தினசரி சந்தையில், காய்கறி வாங்க, பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.சந்தை வளாகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், தினசரி சந்தை வளாகத்தில், தரைக்கடைகளில் அமர்ந்து, வியாபாரிகள் விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில், இடித்து விழும் நிலையிலுள்ள பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய கடைகள் அமைக்கவும் வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த, 4 ஆண்டுக்கு முன், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 6.84 கோடி ரூபாய் செலவில், சந்தை வளாகத்தில், 70 கடைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடைகள் கட்டும் பணி, கடந்த நான்கு ஆண்டாக இழுபறியாகி வருகிறது.ஒரு பகுதியில், கட்டப்பட்ட கடைகளுக்கு, ெஷட்டர் உள்ளிட்டவை அமைக்காமலும், பயன்படுத்தாமலும், புதர் மண்டியும், மது அருந்தும் மையமாகவும், கஞ்சா உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும் மையமாகவும் மாறியுள்ளது.இவ்வாறு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான பணிகளால், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.ஏற்கெனவே, ஆடு வதைக்கூடம், இரண்டு நுண் உரக்குடில்கள் என பல்வேறு காரணங்களால், சந்தை வளாகம் குறுகியுள்ள நிலையில், கட்டப்பட்ட கடைகளும் முழுமையாக பணி முடிக்காததால், வீணாகி வருகிறது.கட்டுமான பணி நடப்பதால், வாகனங்கள் நிறுத்த முடியாமலும், கடைகள் அமைக்க முடியாமலும், சந்தை வளாகத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது.விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை, இறக்கி வைத்து விற்பனை செய்ய முடியாமலும், வாகனங்கள் உள்ளே வர முடியாத நிலை என போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.கட்டுமான பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியும், கட்டுமானங்களும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படாமல் வீணாகி வருகிறது.எனவே, சந்தை வளாகத்தில் கடைகள் கட்டுமான பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை