விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்
உடுமலை; உடுமலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ரூ.136க்கு விற்பனையானது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, புங்கமுத்துார், கப்பளாங்கரை, புக்குளம், பூளவாடி, நல்லிகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 31 விவசாயிகள், 112 மூட்டை அளவுள்ள, 5 ஆயிரத்து, 600 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.134 முதல், ரூ.136 வரையும், இரண்டாம் தரம், ரூ.108.86 முதல், 125 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: இங்கு, கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.நேற்று நடந்த ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால், வாரந்தோறும் கொப்பரை வரத்து அதிகரித்து வருகிறது.இவ்வாறு, தெரிவித்தார்.