உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

உடுமலை; மடத்துக்குளத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ. 64 க்கும், கொப்பரை ரூ. 217 க்கும் விற்பனையானது. மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கொப்பரை மற்றும் தேங்காய் ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 2,382 கிலோ எடையுள்ள, 5,900 தேங்காய், 20 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், 8 வியாபாரிகள் பங்கேற்றனர். இதில், அதிபட்ச விலையாக ஒரு கிலோ தேங்காய், ரூ.64.50க்கும் குறைந்த பட்ச விலையாக, ரூ. 61.50 என சராசரியாக, ரூ.60.20க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 400 ரூபாயாகும். அதே போல், கொப்பரை ஏலத்திற்கு, 15 விவசாயிகள், 15 மூட்டை அளவுள்ள, 469.95 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், அதிகபட்சமாக, ஒரு கிலோ ரூ.217க்கும், குறைந்தபட்சமாக, ரூ.180 என, சராசரியாக, ரூ.205 க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 95 ஆயிரத்து, 119 ரூபாயாகும். ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்த பொருளுக்குரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தேசிய அளவில் வியாபாரிகள் பங்கேற்பதால் கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !