உச்சம் தொட்ட கொப்பரை விலை; வருமானத்தில் இல்லை ஏற்றம்
திருப்பூர்; கொப்பரை விலை உச்சம் தொட்ட போதும், தங்களுக்கு லாபம் இல்லை என்கின்றனர், விவசாயிகள்.மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், திருப்பூர் மாவட்டம் உடுமலை, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் பெருமளவிலான பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.விவசாயிகள், தென்னையில் இருந்து கிடைக்கும் தேங்காய் கொப்பரையை, கூட்டுறவு விற்பனைக் கூடங்கள் வாயிலாக விற்பனை செய்து வரு கின்றனர். கிலோ 184 ரூபாய்
இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு கொப்பரை விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. ஆனைமலை விற்பனைக் கூடத்தில், கிலோ, 184 ரூபாய் விலை கிடைத்திருக்கிறது. 'கொப்பரை வர்த்தகத்தில், இது, வரலாறு காணாத விலையேற்றம்' எனக் கூறப்படுகிறது. ஆனால், 'இந்த விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு பலனில்லை' என்கின்றனர், விவசாய அமைப்பினர். குறைந்தமகசூல்
ஈசன் முருகசாமி, நிறுவனர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்:தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துவிட்டது. இதனால், 50 சதவீதம் அளவுக்கு மகசூல் குறைந்துவிட்டது. மகசூல் குறைவால், கூட்டுறவு விற்பனை கூடங்களுக்கு கொப்பரை வரத்து குறைந்திருக்கிறது; அதே நேரம், கொப்பரைக்கான தேவை மற்றும் சந்தை இருப்பதால், வர்த்தகர்கள் போட்டி, போட்டு விலையை உயர்த்தி, கொப்பரை கொள்முதல் செய்கின்றனர்.இதுதான், கொப்பரை விலை உயர்வுக்கு காரணமே தவிர, விளைச்சல் அதிகரிப்பு காரணமல்ல. உதாரணமாக, 100 கொப்பரையை மகசூலாக பெற்ற விவசாயி, 50 கொப்பரைகளை மட்டுமே மகசூலாக எடுக்கின்றனர். அதன்படி, கொப்பரைக்கு கிடைக்கும் விலை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், குறைவாகவோ அல்லது சரி சமமாகவோ தான் இருக்கும்.தென்னையில் பரவும் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு தோட்டத்தில் மருந்து தெளிக்கும்போது, வெள்ளை ஈக்கள், அடுத்த தோட்டத்துக்கு பரவிவிடுகின்றன. எனவே, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை, தோட்டக்கலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கே லாபம்
ஈஸ்வரன், ஊடகப் பிரிவு தொடர்பாளர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்:கொப்பரை விலை உயர்வால், விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை வாங்கி விற்கும் வியாபாரிகளுக்கு தான் லாபமே தவிர, விவசாயிகளுக்கு அல்ல. கொப்பரை உலர்த்தும் உலர்கலன் உள்ளிட்ட கட்டமைப்பு இல்லாததால், வியாபாரிகளையே விவசாயிகள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.