உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பம்பைக்கு நேரடி பஸ்: சபரிமலை பக்தர்கள் எதிர்பார்ப்பு

பம்பைக்கு நேரடி பஸ்: சபரிமலை பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: 'சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக கோவை, திருப்பூரில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் இயக்க வேண்டும்,' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.திருப்பூரில் இருந்து சபரிமலை செல்ல குமுளி வரை பஸ் இயக்கப்படுகிறது. பயணி ஒருவக்கு கட்டணம், 195 ரூபாய்.அங்கிருந்து கோட்டயம் செல்லும் வழியில் வண்டிப்பெரியார் சென்று, சபரிமலையை அடையலாம். பிற பகுதியில் இருந்து பம்பைக்கு பஸ் இயக்கப்படும் நிலையில், திருப்பூரில் இருந்து நேரடியாக பம்பைக்கு பஸ் இல்லை. அதே நேரம், திருப்பூர் மண்டலத்தின் ஒரு கிளையான பழநியில் இருந்து பம்பைக்கு கேரள மாநில அரசு பஸ் இயக்கப்படுகிறது.போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, 'சபரிமலையை பொறுத்தவரை பெரும்பாலும் குழுவாக, குறைந்தபட்சம், ஐந்து முதல் எட்டு பேர் சேர்ந்து பயணிக்க விரும்புவதால், கார், வேன் தேர்வு செய்து கொள்கின்றனர். குழுவாக பயணிப்போர் வசதிக்காக, சபரிமலைக்கு அரசு பஸ்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. கி.மீ.,க்கு ஏற்ப கட்டணம் மொத்தமாக வசூலிக்கப்படும். குழுவாக பயணிக்க விரும்புவோர் காங்கயம் ரோடு, டிப்போ அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பஸ் ஏற்பாடு செய்து தரப்படும்,' என்றனர்.

கோவை, ஈரோடில் இருந்து ரயில் விடலாமே!

தற்போது, திருப்பூருக்கு அருகே உள்ள ஈரோடு மற்றும் கோவையில் இருந்து சபரிமலைக்கு அருகில் உள்ள ஸ்டேஷன்களான, கோட்டயம், கொல்லம், செங்கனுார், ஸ்டேஷன்களுக்கு நேரடி ரயில் வசதியில்லை; சிறப்பு ரயில் இயக்கமும் இல்லை. இதனால், கொல்லம், கோட்டயம், செங்கனுார் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் செல்லும் ரயில்களில் பயணிக்க வேண்டியுள்ளது. வடமாநிலங்களில் இருந்து, ஆந்திரா, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் மூலமும் பயணிக்க முடியும். கோட்டயம் ஸ்டேஷனில் இருந்து, பம்பைக்கு பஸ் வசதி உள்ளது.பக்தர்கள் வசதிக்காக, இதுவரை, 31 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட போது, ரயில் புறப்படும் இடங்கள் வடமாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு நகர் அல்லது சென்னையாக இருப்பதால், மேற்கு மண்டல பயணிகளுக்கு முன்பதிவு இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ஈரோடு அல்லது கோவையில் இருந்து சபரிமலைக்கு அருகில் ஸ்டேஷன்களுக்கு சிறப்பு ரயில் இயக்கினால், மேற்கு மண்டல பயணிகள் பயன்பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி