நிற்க, அமர, காத்திருக்க... வசதியில்லை ரயில்வே ஸ்டேஷனில் அதிருப்தி
உடுமலை; ரயில்வே ஸ்டேஷனில் தேவையான அளவு நிழற்கூரை அமைத்தல், இருக்கை வசதி, காத்திருப்பு அறை பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பயணியர் அதிருப்தியில் உள்ளனர். திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில் அமைந்துள்ள உடுமலை ரயில்வே ஸ்டேஷன், மதுரை ரயில்வே கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. நிழற்கூரை இல்லை ரயில்வே ஸ்டேஷனில், மூன்று பெட்டிகளுக்கான பயணியர் ஏறும் பகுதியில் மட்டுமே நிழற்கூரை உள்ளது; 20க்கும் அதிகமான பெட்டிகளில் ஏற பயணியர், நிழற்கூரை இல்லாமல், வெயிலிலும், மழையிலும் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டியுள்ளது. அனைத்து 'ப்ளாட்பார்ம்' களிலும், நிழற்கூரை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. முதியவர்கள் நிழற்கூரையில் இருந்து தங்களுக்கான பெட்டி வரை நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். காத்திருப்பு அறையும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால், கழிப்பிடங்களையும் பயன்படுத்த முடிவதில்லை. நிழற்கூரை இல்லாத இடங்களில் உள்ள இருக்கைகள் சேதமடைந்துள்ளதால், நின்று கொண்டே பயணியர் காத்திருக்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனின் எதிர்புறத்தில் ரயில்வேக்கு சொந்தமான இடம், புதர் மண்டி காணப்படுகிறது. அப்பகுதியை துாய்மைப்படுத்தி, கம்பி வேலி அமைக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகள் மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்துக்கு, ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் உடுமலை பகுதி பயணியர் சார்பில், பல முறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், உடுமலை பகுதி பயணியர் அதிருப்தியில் உள்ளனர்.