பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். உடுமலை வளர்ந்து வரும் நகரம். இங்கு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் நகரில், பொள்ளாச்சி ரோடு,பழநி ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு போன்றவை முக்கிய ரோடுகளாக உள்ளன. இதில் ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளன. போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால், போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இதில் முக்கிய பிரச்னையாக ஆக்கிரமிப்புகள் உள்ளன. ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிறு, சிறு விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுகின்றன. இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.