போதையில் அரசு பஸ் இயக்கமா? ப்ரீத் அனலைசர் சோதனை திட்டம்
திருப்பூர்: மது போதையில் சிலர் பணியாற்றுவதாக பயணிகள் புகார்களை அடுக்கியதால், டிப்போக்களில் 'ப்ரீத் அனலைசர்' கருவி கொண்டு டிரைவர்களை சோதிக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.ஈரோடு, தேனி உள்ளிட்ட இடங்களில் அரசு பஸ்களை இயக்கிய டிரைவர்கள் சிலர், மதுபோதையில் இருந்ததாக, பயணிகள் புகார் தெரிவித்தனர். தொடர் புகார்களையடுத்து, டிப்போவில் இருந்து பஸ்களை இயக்கத்துக்கு எடுத்துச் செல்லும் டிரைவர், பணிக்கு வரும் நடத்துனரிடம் மது வாடை இல்லாதததை உறுதி செய்து, பணிக்கு அனுமதிக்க கிளை மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குனர் தரப்பில் இருந்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:டிப்போவில் ஏதேனும் தவறுகள் நடக்கிறதா, பணிக்கு வரும் போது டிரைவர் மது அருந்துகிறார்களா என்பதை கண்டறிய 'ப்ரீத் அனலைசர்' கருவி கொண்டு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.பாதுகாவலர் வாயிலாக சோதனையிடுவது, பஸ் ஸ்டாண்டில், அதிகாலை, மதியம், இரவு நேரங்களில் திடீர் சோதனை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை இச்சோதனை நடத்துவது, சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.