தர்ப்பூசணி பழத்தை தயக்கமின்றி சாப்பிடுங்க!
உடுமலை,; தர்ப்பூசணி பழத்தை தயக்கமின்றி சாப்பிடலாம் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:மடத்துக்குளம் வட்டாரத்தில், 200 ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்டள்ளது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது; நீர்சத்து குறைபாடுகளை நிவர்த்திசெய்கிறது. இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ', 'சி', 'பி1', 'பி6' போன்ற நுண்ணுாட்ட சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.தர்பூசணியில், தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போன்ற, ''லைகோபீன்' எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதால், சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடைமிளகாய் போன்ற காய்கறிகளிலும் இந்தச்சத்து உள்ளது. 'லைகோபீன்' மற்றும் 'பீட்டா கரோட்டீன்' நமது கண் பார்வை திறனை அதிகரிக்கிறது; கண்புரை நோயில் இருந்து பாதுகாக்கிறது.குறைந்த அளவு 'சுக்ரோஸ்' இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும் தர்பூசணி பழத்தை தயக்கமின்றி சாப்பிடலாம்.பொதுமக்கள், தர்பூசணியில் செயற்கை நிறமி சேர்க்கப்படுவதாக பரவிய தகவலை நம்ப வேண்டாம். இவ்வாறு, தெரிவித்தார்.