குறிச்சிக்கோட்டையில் மின் வாரிய பிரிவு அலுவலகம்
உடுமலை; உடுமலை அருகே, குறிச்சிக்கோட்டையில் புதிதாக மின் வாரிய பிரிவு அலுவலகம் திறக்கப்பட உள்ளது. உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டத்திற்குட்பட்ட பகுதியில், மின் இணைப்புகள் அதிகளவு உள்ள பிரிவு அலுவலகங்களை பிரிக்கவும், மின் நுகர்வோர் எளிதாக அலுவலங்களை அணுகும் வகையில், புதிதாக உதவி மின் பொறியாளர் அலுவலகம் திறக்க வேண்டும், என பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், வாளவாடி, தளி, மானுப்பட்டி உதவி பொறியாளர் அலுவலகங்கள் கட்டுப்பாட்டிலிருந்த, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை, குருவப்பநாயக்கனுார், சின்னக்குமாரபாளையம் ஆகிய கிராமங்களுக்குட்பட்ட மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில், குறிச்சிக்கோட்டையில் புதிதாக உதவி பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படுகிறது. குறிச்சிக்கோட்டையிலிருந்து தளி செல்லும் ரோட்டில், வரும், 4ம் தேதி முதல் புதிய அலுவலகம் செயல்படும், என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.