தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
உடுமலை: தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளால், நகர போக்குவரத்தில் நெரிசல் நிரந்தரமாகியுள்ளது.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தாராபுரம் மாநில நெடுஞ்சாலை பிரிகிறது. நகரப்பகுதியில், 2 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு இந்த ரோடு அமைந்துள்ளது.மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படும் இந்த ரோட்டில், தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.இந்த நெடுஞ்சாலையில், நகர எல்லை வரை, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இருபுறங்களிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.சென்டர்மீடியனுக்கும், ஆக்கிரமிப்புக்கும் இடையிலான குறுகலான இடத்தில், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், சிவசக்திகாலனி பகுதி வரை, இருபுறங்களிலும், வாகனங்களை தாறுமாறாக நிறுத்திக்கொள்கின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து, விபத்துகள் ஏற்படுகிறது.குறிப்பாக, ராஜகாளியம்மன் கோவில் அருகே, வாசவி நகர் ரோடு சந்திப்பு பகுதியில், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ரோட்டை கடக்க முடியாத அளவுக்கு, நெரிசல் தொடர்கதையாக உள்ளது.நகர எல்லை வரை, இதே பிரச்னை காணப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.