விவசாய தம்பதி கொலை எதிரொலி தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு
திருப்பூர்:ஈரோடு மாவட்டம், சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த விவசாய தம்பதி கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, தோட்டத்து வீடுகளை கணக்கெடுக்கும் பணியில், 200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில், மூத்த தம்பதியான ராக்கியப்பன், 75, பாக்கியம், 65, வசித்து வந்தனர். இரு நாட்களுக்கு முன், வீட்டுக்குள் புகுந்த கும்பல் இவர்களை அடித்து கொலை செய்து, 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகிரி இரட்டை கொலை எதிரொலியாக, திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், மாவட்டம் முழுதும் உள்ள தோட்டத்து வீடுகளை கணக்கெடுக்க உத்தரவிட்டார்.நேற்று காலை, 6:00 மணி முதல் காங்கேயம், பல்லடம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்டத்து வீடுகள், பி.ஏ.பி., கால்வாய் ஒட்டியுள்ள வீடுகளுக்கு, நேரில் சென்று விசாரித்து, போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். இப்பணியில், 200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில், 'சிசிடிவி' கேமரா போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைக்க, போலீசார் அறிவுறுத்தினர். இந்த இரண்டு சப்-டிவிஷன் முடிந்தபின், அடுத்தடுத்த நாட்களில், தாராபுரம், உடுமலை, அவிநாசியில் இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.