குறைதீர் கூட்டத்தை மறந்த அதிகாரிகள் விவசாயிகள் குமுறல்
உடுமலை: உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும், இரு மாதமாக நடத்தப்படாததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மாதம் ஒரு முறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்து வந்தது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்று வந்தனர். கோட்டாட்சியர் தலைமையில் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தில், பெரும்பாலான அரசு துறை அலுவலர்கள் பங்கேற்காதது, விவசாயிகள் பிரச்னை மற்றும் மனுவுக்கு உரிய முறையில் தீர்வு காணாமல் கிடப்பில் போடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாயிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காதது, நோய் தாக்குதல், உரம் பற்றாக்குறை, தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்காதது என வேளாண் துறை அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர். இந்நிலையில், குறை தீர்க்கும் கூட்டத்தையே கூட்டாமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். உடனடியாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தவும், இதில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பதை உறுதி செய்யவும், விவசாயிகளால் இதுவரை வழங்கப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணவும், கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.