சீரான மின் வினியோகம் தேவை: விவசாயிகள் எதிர்பார்ப்பு
உடுமலை: ஆலாமரத்துார் துணை மின் நிலையத்தில் இருந்து, மும்முனை மின்சாரம் முறையாக வினியோகிக்கப்படாமல், விவசாயிகள் பாதித்து வருகின்றனர். உடுமலை மின் வட்டத்துக்குட்பட்ட ஆலாமரத்துார் துணை மின் நிலையத்தில் இருந்து, சுற்றுப்பகுதியை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. விவசாய மின் இணைப்புகளுக்கு ரூரல் பீடர் அடிப்படையில், குறிப்பிட்ட நேரம் மட்டும் மும்முனை மின்சாரம் வினியோகிப்பது வழக்கம். இந்த நேரம் குறித்து, மின்வாரியம் சார்பில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும்; அதை அடிப்படையாகக் கொண்டு கிணறு மற்றும் போர்வெல் மோட்டார்களை இயக்கி, நீர் பாய்ச்சும் நேரத்தை விவசாயிகள் திட்டமிடுவார்கள். உதாரணமாக, காலை, 6:00 மணி முதல், 10;00 மணி வரையிலும், மாலை நேரத்தில் குறிப்பிட்ட நேரம் மும்முனை மின்சாரம் இருக்கும். கடந்த சில வாரங்களாக, ஆலாமரத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து, முறையாக மும்முனை மின்சாரம் வினியோகிப்பது இல்லை. எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையில், தென்னை மற்றும் இதர சாகுபடிகளுக்கு, நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். அவர்கள் கூறுகையில், 'பருவமழை துவங்காமல் வெயில் அதிகரித்துள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் நீர் பாய்ச்சினால் பயிர்கள் பாதிப்பதை தவிர்க்கலாம். எனவே மும்முனை மின் வினியோகம் குறித்து, முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும். நிரந்தர தீர்வாக, 24 மணி நேரமும் வினியோகம் செய்ய, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.