கிளை கால்வாயை புதுப்பிக்கணும்! விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை: முதலாம் மண்டல பாசனம் துவங்கும் முன், பூலாங்கிணறு கிளை கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பி.ஏ.பி., பூலாங்கிணறு கிளை கால்வாய் வாயிலாக, முதல் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்தில், 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிரதான கால்வாயில், சர்க்கார்புதுார் ஷட்டரிலிருந்து இந்த கிளை கால்வாய் பிரிந்து செல்கிறது. கிளை கால்வாயின் கடைமடை பகுதியாக குடிமங்கலம் ஒன்றிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால், கால்வாய் கரை பல இடங்களில், சேதமடைந்து, பரிதாப நிலையில் உள்ளது. குறிப்பாக, கால்வாயில், தண்ணீர் அழுத்தம் சீராக செல்ல கட்டப்பட்ட 'சொலீஸ்' அமைப்புகளில், அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பில் தண்ணீர் தேங்கும் போது, உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விரயம் அதிகரிக்கிறது. இதே போல், பகிர்மான கால்வாய் ஷட்டர் பகுதியிலும் பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால், நீர் நிர்வாகத்தில், பல்வேறு பாதிப்புகளை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். நீண்ட காலமாக கால்வாயில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன் கரையிலுள்ள, முட்புதர்கள் மட்டும் அகற்றப்படுகிறது. கடைமடை வரை, முழுமையாக பாசன வசதி பெற, வரும் முதலாம் மண்டல பாசனத்துக்கு முன், பூலாங்கிணறு கிளை கால்வாயை முழுமையாக புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.