உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்தணும்; எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியிடம் விவசாயிகள் மனு

அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்தணும்; எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியிடம் விவசாயிகள் மனு

உடுமலை; அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தாராபுரம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து, தொழில் துறையினர், விவசாயிகள் மனு அளித்தனர். மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம், பயணமாக நேற்று முன்தினம் உடுமலை வந்தார் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி.நேற்று காலை, இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தொழில் துறையினர் விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார். விதை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் காளிதாஸ் மனு: கோவையை தலைமையிடமாகக்கொண்டு, 840 பணியிடங்களுடன், செயல்பட்டு வந்த விதைச்சான்றளிப்பு துறை இயக்குனர் அலுவலகம், தற்போது சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும். திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும். அமராவதி அணை இரு மாவட்ட விவசாயம், குடிநீர் ஆதாரமாக உள்ளதோடு, ஆண்டுக்கு 18 டி.எம்.சி., நீர் தேவைப்படுகிறது. 4 டி.எம்.சி.,கொள்ளளவு அணை மட்டுமே உள்ளதால், பருவமழை காலங்களில் நீர் தேக்க முடியாமல் வீணாகி வருகிறது. எனவே, திட்டமிட்டபடி அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாயிகள், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கத்தினர் மனு: தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், விவசாயம் சார்ந்த தொழில் துறை அங்கீகாரம் ஒற்றை சாளர முறை அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பச்சை சான்றிலிருந்து, வெள்ளை வகைக்கு மாற்ற வேண்டும். இலவச மின்சாரம், தனி நல வாரியம், எளிமையான கடன் வசதி, சோலார் மின் உற்பத்தி முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும், திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு வெள்ள தடுப்புச்சுவர், கான்கிரீட் வீடு, ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். தாராபுரம் குளத்துப்பாளையம் சிப்காட் எதிர்ப்பு குழுவினர் கொடுத்த மனு: கூட்டுறவு நுாற்பாலையாக செயல்பட்டு வந்த, 56 ஏக்கர் நிலத்தில், தொடங்கப்படும் சிப்காட் தொழிற்பேட்டையில், சாய ஆலை உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் ஆலைகளால், சுற்றுச்சூழல், அமராவதி ஆறு பாதிக்கும். இத்திட்டத்தை ரத்து செய்து, வேளாண் கல்லுாரி, தொழில்நுட்ப கல்லுாரி அமைக்க வேண்டும். அமராவதி உபரி நீரை நல்லதங்காள் ஓடைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உடுமலை பார் அசோசியேசன் சார்பில், 'தற்போதுள்ள நீதிமன்ற வளாகத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டி தர வேண்டும்,' என மனு அளிக்கப்பட்டது. விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், 'காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கவும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பி.ஏ.பி., திட்டத்தை மறு சீரமைப்பு செய்து, தென்னை சார்ந்த பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயிக்க தனி வாரியம், கள் இறக்க அனுமதி, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை வேளாண் துறை என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும், ' மனு அளித்தனர். உடுமலையில் பிரசாரம் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று முன்தினம் இரவு பிரசாரம் நடந்தது. உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பிரசாரத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, பேசுகையில், ''தி.மு.க., அரசு, கடந்த தேர்தலில், 525 வாக்குறுதிகள் அளித்தது; ஆனால், நிறைவேற்றவில்லை. சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல், ஆசையை துாண்டி, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியது,'' என்றார்.

சந்திப்பு கூட்டம் ரத்து

உடுமலையில் நேற்று, காலை, தொழில்துறையினர், விவசாயிகள் சந்திப்பு கூட்டம் ஐ.எம்.ஏ., ஹாலில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் விவசாயிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் பழனிசாமி தங்கியிருந்த வீட்டிற்கு முன் வந்து மனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை