காந்தி தத்தெடுத்த முத்து பி.எஸ்.சுந்தரம்
''திருப்பூரில் நடத்த சட்ட மறுப்பு இயக்க போராட்டத்திற்கு தலைமையேற்றவர் பி.எஸ்.சுந்தரம்; அவரது பெயர் தாங்கிய வீதியில் வசிப்பது, அங்குள்ள மக்களுக்கு பெருமை'' என்கிறார் அவிநாசியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன்.அவர் கூறியதாவது:தன்னை யார் சந்திக்க வந்தாலும், அவர்களிடம் ஹரிஜன நிதி திரட்டுவது, மகாத்மா காந்தியின் பழக்கம். அவரது கொள்கையில் ஈர்க்கப்பட்ட லட்சுமி என்ற பெண், மகாத்மா காந்தியை சந்திக்க பெங்களூருவில் உள்ள நந்தி ஹில்ஸ் ஆஸ்ரமத்துக்கு செல்கிறார். காந்தியிடம் போராட்ட நிதி வழங்க, 100 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு, காந்தியை சந்திக்க காத்திருக்கிறார்.ஆனால், காந்தியை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து, கடும் முயற்சிக்கு பின் காந்தியை சந்தித்துள்ளார். தன் குடும்பம், பிள்ளைகள் குறித்து அவரிடம் கூறியுள்ளார். பின், நிதியாக, தன்னிடம் இருந்த, 100 ரூபாயை லட்சுமி வழங்க, அதை வாங்க மறுத்தார் காந்தி, அதற்கு பதிலாக, அவரது மகனை நாட்டுக்கு தத்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்; மனமுவந்து ஏற்றார் லட்சுமி. 19 இடங்களில் எலும்பு முறிவு;
சுந்தரத்தின் தியாக வாழ்க்கை
அப்படி தேச விடுதலைக்கு தத்துக் கொடுப்பட்ட அவரது மகன் தான், பி.எஸ்.சுந்தரம். காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை திருப்பூரில் தலைமையேற்று நடத்தியவர்.'இந்த ஊர்வலத்தில் போலீசாரால் அடிபட்டு செத்தாலும் சாவோம்; எதற்கும் தயாரானவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள்' எனக்கூறி, ஒரு எழுச்சியுரை ஆற்றுகிறார். போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை அடித்து, துவைத்த வெள்ளைக்கார போலீசார், கடைசி வரை பி.எஸ்.சுந்தரத்தை அடிக்கவேயில்லை; மாறாக, கடைசியில் தான் அவரை நையப் புடைக்கின்றனர்.'போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், 19 இடங்களில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. சிகிச்சை பின், அவர் நொண்டியபடி தான் நடப்பார்; காது கேட்காது. இறக்கும் போது ரத்தம் கக்கி இறந்திருக்கிறார்; இப்படியான தியாக வாழ்க்கை அவருடையது. அவர் மட்டுமின்றி, அவரது மனைவி, அம்மா என அனைவரும் சுதந்திர போராட்ட வேட்கை நிறைந்தவர்கள்' என்கிறது வரலாற்று குறிப்பு.இவ்வாறு, அவர் கூறினார். திருப்பூர், அவிநாசியில் பி.எஸ்.சுந்தரம் பெயரில் சாலை பி.எஸ்.சுந்தரம், காந்திநகரில் தங்கியிருந்தார்; சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர். சுதந்திர போராட்டத்துக்கென, அவரது தாயாரால் அர்ப்பணிக்கப்பட்டவர். திருப்பூர் - ஊத்துக்குளி சாலையின் பெயர் பி.எஸ்.சுந்தரம் சாலையாகும். அவிநாசியில் இவரது பெயரைத் தாங்கிய வீதி உள்ளது. இளம் தலைமுறையினர் குறிப்பாக திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள், அவரது வரலாறு குறித்து அறிந்துகொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வீதிகளுக்கு வைப்பதற்குக் காரணம், அவர்களது வரலாற்றை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்குத்தான்.