மேலும் செய்திகள்
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
11-Aug-2025
திருப்பூர்; 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்ட செயல்பாடுகளை 'அப்டேட்' செய்ய வேண்டும்' என, கிராம ஊராட்சிகளுக்கு தமிழக அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. தமிழக அரசின் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு, 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கிராம இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்க, விளையாட்டு உபகரணங்களுடன், டீ சர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், விளையாட்டு ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மன்றத்தினர், அந்த விளையாட்டு உபகரணம் மற்றும் உடைகளை பயன்படுத்தி, தினசரி விளையாட்டு பயிற்சி பெற வேண்டும்; விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது தான், அரசின் அறிவுரை. இந்நிலையில், பல ஊராட்சிகளில், இந்த விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படாமல், காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன என்ற புகார் தமிழக அரசின் கவனத்துக்கு சென்றுள்ளது. விளைவாக, தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியில், 'கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்' என்ற பெயரில் பிரத்யேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் அந்த விளையாட்டு உபகரணங்களின் பயன்பாடு, அவற்றை விளையாட்டு வீரர்கள் எந்தளவு பயன்படுத்துகின்றனர் என்பது போன்ற விபரங்களை புகைப்படம் எடுத்து, அந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தமிழக அரசின் விளையாட்டுத்துறை வழிகாட்டுதல் வழங்கிஇருக்கிறது. விளையாட்டு உபகரணங்களை வழங்காமல் வைத்துள்ள ஊராட்சி நிர்வாகங்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட கிராமங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு மன்றத்தினரை தேர்வு செய்து, அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, அவர்களை விளையாடுவதை புகைப்படம் எடுத்து, செயலி வாயிலாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். பெரும்பாலான கிராம ஊராட்சிகளில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும் தான், விளையாட்டு மைதானங்களில் விளையாடுவோரை காண முடியும் என்ற நிலையில், வார நாட்களிலும், இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், அந்நாட்களில் மைதானங்கள் காலியாக இருக்கின்றன; இதனால், கிராம ஊராட்சி செயலர்கள் திணறுகின்றனர்.
11-Aug-2025