விதிமீறும் கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு
உடுமலை; உடுமலையிலிருந்து திருமூர்த்தி, அமராவதி, மூணார், மறையூர் உட்பட தொலைதுாரம் மற்றும் கிராமப்பகுதிகளுக்கு, செல்வதற்கான பிரதான வழித்தடமாக தளிரோடு உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. தளிரோடு நகரப்பகுதியில் வணிக கடைகளுக்கு வருவோர், வாகனங்களை நிறுத்தவதற்கு பார்க்கிங் வசதி இல்லாததால், குட்டைத்திடலில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பான்மையான வாகன ஓட்டுனர்கள் அங்கு நிறுத்துவதில்லை. தளிரோட்டில் வணிக கடைகளின் முன்பே நிறுத்திக்கொள்கின்றனர். ரோடு ஏற்கனவே குறுகலாக இருப்பதால், போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில், வாகனங்கள் வரிசைகட்டி காத்திருக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில், வாகனங்கள் ஒதுங்கி செல்வதற்கும் வழியில்லாமல், கார் போன்ற கனரக வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். குறிப்பாக, தளிரோடு சிக்னல் முதல் முதற்கிளை நுாலகம் வரை வாகனங்கள் ரோட்டோரத்தில்தான் நிறுத்தப்படுகின்றன. பார்க்கிங் வசதி இருப்பினும் இவ்வாறு நிறுத்தப்படுவதை, போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. வணிக கடைகள் வாகனங்களை ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துவதை தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டியும் அவசியமாகியுள்ளது. விதிமுறை மீறி வாகனங்களை நிறுத்தும் ஓட்டுனர்களின் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.