ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு; தனியார் பள்ளி தாளாளர் மகன் கைது
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம், 41. மாற்றுதிறனாளி. ஐகோர்ட் வக்கீல். இவருக்கும், இவரின் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சமீபத்தில், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சித்தப்பா நடத்தி வரும் தேன்மலர் மெட்ரிக் பள்ளி முறையான அனுமதியில்லாமல், விதிமுறை மீறி கட்டடம் கட்டப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டில், கோர்ட் சம்பந்தப்பட்ட வகுப்பறைகளை இடிக்க உத்தரவிட்டது. இதற்கான அளவீட்டு பணியை பார்க்க, கடந்த ஜூலை 28ம் தேதி நண்பர்கள், உறவினர் என, நான்கு பேருடன் முருகானந்தம் சென்றார். அப்போது, கூலிப்படையினர் முருகானந்தத்தை வெட்டி கொன்றனர். இதுதொடர்பாக, அவரின் சித்தப்பா, பள்ளி தாளாளர் தண்டபாணி உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில், தண்டபாணி உள்ளிட்டோர் ஜாமீன் மனு கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதனை கோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்ததது. கொலை விவகாரத்தில் வெளிநாட்டில் உள்ள பள்ளி தாளாளரின் மகனான கார்த்திகேயன், 32 என்பவர் மீதும் புகார் எழுந்தது. எனவே, அவரை கைது செய்யும் வகையில், அனைத்து விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு இந்தோனேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கார்த்திகேயன் வந்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.