உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறவைகள் சரணாலயம் தகுதியை இழக்கிறதா நஞ்சராயன் குளம்?: குறைகிறது வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை

பறவைகள் சரணாலயம் தகுதியை இழக்கிறதா நஞ்சராயன் குளம்?: குறைகிறது வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டு பறவையினங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 'கழிவுநீர் சங்கமித்திருப்பதால் குளத்தின் உயிர்ச்சூழல் தன்மை பாழ்பட்டிருக்கிறது' என கூறப்படுகிறது.திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம், 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 146 வகை உள்நாட்டு பறவைகள், 43 வகை வெளிநாட்டு பறவைகள் என, இதுவரை, 189 வகை பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த, 2022ல், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 2024 ஆக., மாதம், இக்குளத்துக்கு 'ராம்சார்' அங்கீகாரமும் வழங்கப்பட்டது. நீர்வாழ் பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க வழங்கப்படும் உலகளாவிய அங்கீகாரம் இது.பொதுவாக, அக்., - டிச., குளிர்காலத்தில் இக்குளத்துக்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வலசை வரும் நிலையில், இந்தாண்டு, வலசை வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது.

உயிர்ச்சூழல் பாதிப்பு

இது குறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:நஞ்சராயன் குளத்திற்கு நல்லாறு வழியாக வரும் நீர், மழைநீர் தான் ஆதாரம். கடந்தாண்டுகளில் பெய்த தொடர் மழையால் குளத்தில் நீர் நிரம்பி ததும்புகிறது; அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்திலும், இக்குளத்தில் நீர் நிரம்புகிறது. இக்குளத்தில், 110 வகையான தாவரங்கள் உள்ளன. மழைக்காலம் துவங்கிய பின், குளம் நிரம்பும். அப்போது மரங்களில், உள்ளூர் பறவைகள் கூடு கட்டும். பட்டை தலை வாத்து உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள், மரங்களில் ஓய்வெடுக்காது; குளக்கரை, மண் திட்டுகளில் தான் அமர்ந்திருக்கும்.ஆனால், ஆண்டு முழுக்க குளத்தில் நீர் தேங்கியிருப்பதால், நீர்வாழ் தாவரங்கள் வளர்வதற்கான சூழல் இல்லை. வலசை வரும் வெளிநாட்டு கடற்கரையோர பறவைகள் அமர்ந்து இளைப்பாறுவதற்கான மண் திட்டு, கரைகளும் தென்படவில்லை. குளம் முழுக்க நீர் நிரம்பியிருக்கிறது. இதனால், உயிர்ச்சூழல் மண்டலம் பாதித்து, பறவைகள் வந்து செல்வதற்கான சூழல் குறைந்திருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணனிடம் கேட்ட போது, ''கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கட்டமைப்பில் உள்ள குறைபாடு கண்டறியப்பட்டு, சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

பொறுப்புணருமா நீர்வளத்துறை!

நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இக்குளத்தில், திருப்பூர் வடக்கு பகுதியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. கழிவுநீரை வெளியேற்ற நீர்வளத்துறையினர் சார்பில் அமைக்கப்பட்ட துணை கால்வாய் பயனற்று கிடக்கிறது. வனத்துறை மற்றும் நீர்வளத்துறையினர் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பறவைகள் சரணாலயம் என்ற தகுதியை இக்குளம் இழக்கும் என்பதே, இயற்கை ஆர்வலர்களின் வருத்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ