சுயநலத்துக்கு பலியாகும் மரங்கள்: வெட்டுவது எளிது... வளர்ப்பது தான் கஷ்டம்!
திருப்பூர் : ஏ.எஸ். நகர் குடியிருப்பு பகுதியில் நன்கு வளர்ந்த மாமரம் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர், காங்கயம் ரோடு, ஏ.எஸ்., நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. அப்பகுதியில், ஏராளமான மரங்களும் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், ஏ.எஸ். நகர் முதல் வீதியில் உள்ள வீடுகளின் முன் பல வகையான மரங்கள் உள்ளன.அங்குள்ள ஒரு வீட்டின் முன் நன்கு வளர்ந்த மாமரம் ஒன்று நேற்று முன்தினம் இரவோடு இரவாக அனைத்து கிளைகளும் வெட்டி அகற்றப்பட்டு, மொட்டையாக காட்சியளிக்கிறது. அக்கம் பக்கத்தினர் அறிவுறுத்தியும் அதைப் பொருட்படுத்தாமல் இந்த மரத்தை வெட்டி அகற்றியதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.அந்த பகுதியில் மின் கம்பி உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், இந்த மரம் வெட்டி அகற்றப்பட்ட செயல் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்த பசுமை ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், 'ஒரு மரத்தை பல ஆண்டாக வளர்ப்பது எவ்வளவு கஷ்டம். ஆனால், நொடிப்பொழுதில் வெட்டி வீழ்த்தி விடுகின்றனர். திருப்பூரில் சமீப காலமாக மரங்களை வெட்டும் போக்கு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்,' என்றனர்.