உடுமலை: உடுமலை அருகே, ஜம்புக்கல் மலையை மீட்க வலியுறுத்தி, 8வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை அருகேயுள்ள, ஆண்டியகவுண்டனுாரில் உள்ள ஜம்புக்கல் மலைத்தொடரை, தனியார் ஆக்கிரமித்து, மரங்களை வெட்டியும், பாறைகளை உடைத்தும் பசுமையான மலையை அழித்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான மலையை காப்பாற்ற, அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனரக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். போலி ஆவணங்கள் வாயிலாக ஏழை விவசாயிகளுக்கு வழங்கிய கண்டிசன் பட்டாவை, முறைகேடாக மாற்றி, விற்பனை நடந்தது குறித்தும், விவசாயிகளின் நிலத்தை அபகரித்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், போராட்டம் நடக்கிறது. கடந்த, 10ம் தேதி மலையடிவாரத்தில் துவங்கிய, தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று, 8வது நாளாக நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், 'ஜம்புக்கல் மலையை காக்க அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாரமாக போராட்டம் நடக்கும் நிலையில், அரசு தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால், சட்டசபை தேர்தலில் விவசாயிகள் ஒருமித்த முடிவு எடுக்க நேரிடும்,' என, எச்சரிக்கை விடுத்தனர்.