உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகிழ்ச்சி ஒருபுறம்; சவால் மறுபுறம்; சாய ஆலை உரிமையாளர்கள் நிலை

மகிழ்ச்சி ஒருபுறம்; சவால் மறுபுறம்; சாய ஆலை உரிமையாளர்கள் நிலை

திருப்பூர்: மகிழ்ச்சியும், சவாலும் நிறைந்த மனநிலையை சாய ஆலை உரிமையாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு. இந்தியாவிலேயே, திருப்பூரில் மட்டும் தான், சாயக்கழிவுநீர் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மொத்தம், 380 சாய ஆலைகள் இணைந்து, 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கி வருகின்றன. கடுமையான மின்கட்டண செலவும், உற்பத்தி செலவும் ஏற்படுவதால், பசுமை சார் உற்பத்தி பணிக்கான அங்கீகாரம் வழங்க வேண்டுமென, சாய ஆலைகள் வலியுறுத்தி வருகின்றன. ஜி.எஸ்.டி., அறிமுகமான போது, சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு சேவைக்கு, 12 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது. மாசுபாட்டை குறைக்கும் சுத்திகரிப்பு பணிக்கு, வரிவிலக்கு வேண்டும் அல்லது குறைந்தபட்ச வரிவிதிப்பு செய்ய வேண்டு மென வலியுறுத்தி வந்தனர். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு வாயிலாக, 12 சதவீதமாக இருந்த வரி, தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், சாய ஆலை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், கெமிக்கல் மற்றும் சாயத்துக்கான வரி குறையவில்லை; 18 சதவீதமாக தொடர்கிறது. சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் பெரிய சாய ஆலைகள், 'ஸ்டீம்' தயாரிப்புக்காக, நிலக்கரியை கொண்டு 'பாய்லர்' இயக்குகின்றன. அதற்காக, தினமும் டன் கணக்கில் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது; மாதம் ஒரு கோடி ரூபாய் வரை நிலக்கரி செலவு ஏற்படுகிறது. இதுவரை, 5 சதவீதமாக இருந்த, நிலக்கரி ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவை குறைக்கும் முயற்சி சவாலாக மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை