கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் புதுப்பொலிவுடன் திறப்பு
திருப்பூர்; கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் காமராஜ் ரோட்டில் செயல்பட்டு வரும் மத்திய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, தற்காலிக பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் செயல்பட்டது. தாராபுரம் ரோடு வழியாக இயக்கப்படும் பஸ்கள் இங்கு நின்று திரும்பிச் சென்றன. பஸ் ஸ்டாண்ட் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் மீண்டும் பயன்படுத்தப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மத்திய பஸ் ஸ்டாண்ட் முற்றிலும் புதிய வளாகமாக மாற்றும் திட்டம் துவங்கிய போது, மீண்டும் கோவில்வழியில் பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக செயல்பட துவங்கியது. மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மாநகராட்சி மன்றத்தில், திருப்பூருக்கு மூன்றாவது பஸ் ஸ்டாண்டாக கோவில்வழி பஸ் ஸ்டாண்டை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2023ல் இந்த பஸ் ஸ்டாண்ட் புதுப்பித்து புதிய வளாகமாக 26 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது. நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இதற்கு நிதி பெறப்பட்டு பணிகள் துவங்கி நிறைவு பெற்றன. முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக இதை திறந்து வைத்தார். தியாகி திருப்பூர் குமரன் பஸ் ஸ்டாண்ட் என்ற பெயரிடப்பட்டுள்ளது. --- புதுப்பொலிவுடன் காட்சி தரும், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு மிக முக்கியம் மக்களுக்கும் பங்கு உண்டு கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், அடுத்தடுத்து மூன்று தளங்களாக பஸ்கள் நிற்குமிடம் அமைக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் மொத்தம், 35 கடைகள் அமைந்துள்ளன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அனைத்து தளங்களிலும், கழிப்பறை மற்றும் குளியலறைகள் வசதியும், பஸ் ஸ்டாண்ட் முழுவதும் 'சிசிடிவி' கேமரா, போலீஸ் அவுட் போஸ்ட், நிர்வாக அறை, ஊழியர் அறை, புக்கிங் கவுன்ட்டர், நேரக் காப்பாளர் அறை, பொருள் பாதுகாப்பு அறை ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர இரு சக்கர வாகன பார்க்கிங் வளாகமும் உள்ளது. எல்லா வசதிகளுடன் இருந்தாலும், இதை முறையாகப் பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. பயணிகளுக்கும் இதில் பங்கு உள்ளது.