அவிநாசி ரோடு ஒரு வழிப்பாதையாக்க மா.கம்யூ. எதிர்ப்பு; போலீசுக்கு கடிதம்
திருப்பூர்: அவிநாசி ரோட்டில் மேற்கொள்ள உள்ள போக்குவரத்து மாற்றத்தை கைவிட வேண்டும் என, மா.கம்யூ., கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மா.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி அளித்த மனு: அவிநாசி ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்றி, 60 அடி ரோடு, பி.என் ரோட்டில் வாகனங்கள் செல்ல வேண்டும் என சொல்லியிருப்பது பி.என். ரோட்டில், குறிப்பாக மேட்டுப்பாளையம், மில்லர் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் போக்குவரத்து நெருக்கடியை கடுமையாக அதிகரிக்கும். ஒரு வழிப்பாதையாக மாற்ற உத்தேசத்திற்கும் அவிநாசி ரோடு அருகே இருக்கும் பகுதிகளான ஓடக்காடு, முருங்கப்பாளையம், குமார் நகர், ராம் நகர், ராமையா காலனி ஆகியவற்றில், வீடுகள், பனியன் தொழில், சரக்கு போக்குவரத்து லாரி தொழில், என்று ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல பகுதிகளில் இருந்து வந்து வேலை செய்கின்றனர். போக்குவரத்து மாற்றம் செய்வதால் இவர்கள் கூடுதல் நேரம், துாரம் பயணம் மேற்கொள்வதுடன் பி.என். ரோடு பகுதியில் நெருக்கடியில் சிக்கிக்கொள்ள கூடிய நிலைமையும் ஏற்படும். அவிநாசி ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்றுவதால் குமார் நகர், பங்களா ஸ்டாப் ஆகிய பஸ் ஸ்டாப்கள் இனி இருக்காது. பஸ்களில் வேலைக்கு வரக்கூடிய பயணிகள், இதர பொதுமக்கள், பெண்கள் எவ்வாறு பல பகுதிகளுக்கும் செல்ல முடியும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. பல்வேறு சிரமங்கள் உள்ள, போலீசார் உத்தேசம் செய்திருக்கும் போக்குவரத்து மாற்றத்தை கைவிட வேண்டும். தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
ஜனநாயக நடைமுறை கைவிடப்பட்டதாக குமுறல்
கடந்த காலங்களில் இது போன்ற முக்கிய முடிவுகள் அரசு நிர்வாகத்தால் எடுக்கும் போது திருப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு செயல்படுத்தும் நடைமுறை இருந்து வந்தது. சமீப ஆண்டுகளாக இந்த ஜனநாயக நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. நகர வளர்ச்சி சார்ந்து போலீஸ் மற்றும் அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் முக்கிய முடிவுகளுக்கு முன்பாக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புகளை கலந்து ஆலோசனை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்கிறது மா.கம்யூ.