உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில் நாளை மஹா கும்பாபிேஷகம்

ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில் நாளை மஹா கும்பாபிேஷகம்

அவிநாசி; அவிநாசி அருகே சாமந்தங்கோட்டை ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நுாற்றுக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அவிநாசி ஒன்றியம், சாமந்தங்கோட்டையில் ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில் உள்ளது; இதன் மஹா கும்பாபிஷேக விழா நாளை காலை 9:00 முதல், 9:30 மணி வரை நடைபெறுகிறது. திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதினம் காமாட்சி தாச சுவாமி, ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவான நந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. நேற்று அங்காளம்மன் கோவிலிலிருந்து முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நேற்று மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, நவகோள் வேள்வி, கும்பலங்காரம், மிருத் சங்கிரஹனம், யாகசாலை பிரவேசம் ஆகியவற்றுடன் முதல் கால யாக பூஜைகள் துவங்கின. இன்று விசேஷ சந்தி, அஷ்டபந்தன மருந்து சாற்றி விநாயகப் பெருமானை மூலாலயத்தில் அமர்த்துதல், திரவியாகுதி, பூர்ணாகுதி, திருமுறைகள் விண்ணப்பித்தல் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடக்கின்றன; நாளை காலை நாடி சந்தானம், திருக்குடங்கள் உலா வருதல் ஆகியவற்றுடன் கோபுர விமான கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ தொந்தி விநாயகப் பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அலங்கார தீபாராதனை, தரிசனம் ஆகியவை நடக்கின்றன; ஏற்பாடுகளை மேற்கொள்ளும் திருப்பணி குழுவினர், ஸ்ரீ அங்காளம்மன், வஞ்சியம்மன் கோவில் டிரஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் அன்ன தானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !