மகப்பேறு மையம் எதிர்நோக்கும் கூடுதல் படுக்கை வசதிகள்
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அனுமதியாகும் கர்ப்பிணிகள், பிரசவங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருப்பதால், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. மகப்பேறு பிரிவுக்கென தனி கட்டடம் (பிளாக் - பி) செயல்படுகிறது. 250 படுக்கை வசதிகள் உள்ளன.மகப்பேறு பிரிவுக்கு, 25 முதல், 35 டாக்டர்கள், செவிலியர், ஊழியர், உதவியாளர் உட்பட, 70க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் பணியாற்றுகின்றனர். 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் இப்பிரிவில் அனுமதியாகி சிகிச்சை பெற மாவட்டம் முழுதும் இருந்து கர்ப்பிணிகள் வருகின்றனர்.பெரும்பாலான நேரங்களில் படுக்கை வசதி போதுமான அளவு இல்லாததால் சிக்கல் உருவாகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், படுக்கை எண்ணிக்கை, 300 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 11 மாதங்களில் 6483 பிரசவங்கள்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில், தினசரி, 18- 24 குழந்தைகள் பிறக்கின்றன. மாதம், சராசரியாக, 550 முதல், 590 பிரசவம் நடக்கிறது. கடந்த ஜன., முதல் நவ., வரையிலான, 11 மாதத்தில், 6,483 பிரசவங்கள் நடந்துள்ளது.பிரசவங்களில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக சுகப்பிரசவங்கள் நடக்கின்றன. தாய் அல்லது சேய் இருவரில் ஒருவர் சிரமத்தையே, இக்கட்டான நிலையோ சந்தித்தால் மட்டுமே, வேறு வழியின்றி, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கின்றனர்.கடந்த மே முதல் அக்., வரையிலான ஆறு மாத காலத்தில், 3,542 குழந்தைகள் பிரசவம் நடந்துள்ளது. இதில், 1,522 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம், 2,021 குழந்தைகள் சுக பிரசவத்திலும் பிறந்துள்ளன.இவ்வாறு சுகப்பிரசவம் அதிகம் நடப்பதால், கர்ப்பிணிகள் இங்கு அதிகம் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, கூடுதல் படுக்கை இட ஒதுக்கீடு கேட்டு, மருத்துவ கல்லுாரி நிர்வாகம் தரப்பில் அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டியது கட்டாயம்.