திருப்பூர் வடக்கு ரோட்டரி சார்பில் நொய்யல் கரையில் முக்தி மண்டபம்
திருப்பூர்; இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏதுவாக, நொய்யல் கரையில், 'முக்தி' என்ற நீத்தார் மண்டபம் அமைக்கப்படுமென, திருப்பூர் வடக்கு ரோட்டரி அறிவித்துள்ளது.திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்துக்கு பொறுப்பேற்றுள்ள தலைவர் குணசேகரன், செயலாளர் அம்பி ரத்தினம், பொருளாளர் குபேந்திரன் ஆகியோர் கூறியதாவது:திருப்பூர் வடக்கு ரோட்டரி வாயிலாக, 23 மெஷின்களுடன் இயங்கும் டயாலிசிஸ் மையம், கூடுதலாக 10 மெஷின்களுடன் விரிவாக்கம் செய்யப்படும். திருப்பூரில். வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள், இறந்தவர்களின் உடலை வைத்து இறுதிமரியாதை செலுத்த ஏதுவாக, நொய்யல் கரையில், 'முக்தி' என்ற நீத்தார் மண்டபம் அமைக்கப்படும்.முன்னோர்களுக்கு, அமாவாசை நாட்களில் திதி கொடுக்க ஏதுவாக, மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி இடம் பெற்று, 'தர்ப்பணாலயம்' என்ற பெயரில், நொய்யல் கரையில், அனைத்து வசதிகளுடன் திதி சடங்கு செய்யும் ஆலயம் நிறுவ உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், மாவட்ட கவர்னர் தனசேகரின் முதன்மை திட்டங்கள்; திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் நடத்தி வரும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலன், குடிநீர், நோய் தடுப்பு, கல்வி, சமூக சேவை உட்பட ஏழு வகையான திட்டங்களும் செம்மையாக நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.