குரலற்றவர்களாக துாய்மை பணியாளர்கள்: தேசிய ஆணைய தலைவர் கவலை
பல்லடம்; திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில், 'இந்தியாவில் துாய்மை பணியாளர்களின் இன்றைய நிலை' என்ற தலைப்பிலான கருத்தரங்கு, சுல்தான்பேட்டை அருகே வாரப்பட்டியில் நடந்தது. அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம், நிப்ட்-டீ கல்லுாரி செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். தேசிய துாய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் பேசியதாவது: இன்றைய சூழலில், துாய்மை பணியாளர்கள் அலுவலகத்துக்கு உள்ளே சென்று கோரிக்கையை கூட கூற முடியாத நிலை உள்ளது. துாய்மை பணியாளர்கள், தொழில் செய்து முன்னேறவும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மாநில அரசு இதை செயல்படுத்துவதில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளையும் முறைகேடாக பிறர் அபகரிக்கின்றனர். பொருளாதார ரீதியான முன்னேற்றம், சமூக அங்கீகாரம் துாய்மைப்பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டும். ஒப்பந்த முறையை ஒழித்து, சொசைட்டி அமைப்பதன் வாயிலாக மட்டுமே இவர்களது வாழ்வாதாரம் உயரும். முறைகேட்டை தடுக்க, பணியாளரின் வங்கி கணக்கிற்கே சம்பளம் வழங்கும் முறை கர்நாடகாவில் உள்ளது. அரசின் பினாமியாக உள்ள ஒப்பந்ததாரர்களை மீறி செயல்பட முடியாத பணியாளர்கள், சமுதாயத்தில், குரலற்றவர்களாவே உள்ளனர். பணி நிரந்தரமாக்கப்படும் என்று கூறி அவர்களை ஏமாற்றுகின்றனர். பணி சூழல் மற்றும் 25 பேரை நியமித்து, 150 பேர் பார்க்கும் வேலையை வாங்குவதால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். துாய்மை பணியாளரை ஒப்பந்த முறையில் மட்டுமே வைக்க மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பணியாளரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒப்பந்ததாரர்கள் ஊழல்வாதிகளே! மத்திய அரசு, இந்த அவமரியாதைகளை மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு ஒரு உறுதியான சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். எழுத்தாளர்கள் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, கல்வெட்டு ராமச்சந்திரன், ஒத்திசைவு ராமசாமி, ஹரன் பிரசன்னா, கவிஞர் முத்துபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறக்கட்டளை நிர்வாகிகள் சத்யநாராயணன், ஹரிபிரசாத், சிவகுமார் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.