தேசிய வேலை உறுதி திட்டம்; மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்
உடுமலை; உடுமலையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்,பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்பகுதிகளில் அரசு கட்டடடங்கள் கட்டுவதற்கு, வேளாண் பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டிலும் மரக்கன்று நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாற்றுகள் பராமரிக்கப்படுகின்றன.போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தின் அருகில், நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு, பழவகை மரக்கன்றுகள், புளி, வேம்பு, அரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களின் நாற்றுகள் பராமரிக்கப்பட்டு ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன.உடுமலை வட்டாரத்தில் நடப்பாண்டுக்கு, 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில், ஏற்கனவே 1,300 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தற்போது பருவமழை துவங்கி இருப்பதால், மரக்கன்றுகள் பராமரிப்பதற்கும், நடுவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.நீர்நிலைகளின் அருகில், பள்ளி வளாகங்களில், ஊராட்சி பொது இடங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு, ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுதவிர, நடப்பாண்டில் கூடுதலாக 'பசுமை தமிழக இயக்கம்' என்ற அமைப்பின் கீழ் மரக்கன்று நடுவதற்கு, சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவில் ஊராட்சித்தலைவர் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய அலுவலர்களும் உள்ளனர். ஐந்தாயிரம் மரக்கன்றுகள் ஒரே இடத்தில் அடர் நடவு செய்வதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.ஜல்லிபட்டி மற்றும் வாளவாடி பகுதிகளில் அடர் நடவு செய்வதற்கு, அதிகாரிகள் இடங்களை ஆய்வு நடத்துகின்றனர்.