உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேண்டாம் போதை... மாறும் பாதை

வேண்டாம் போதை... மாறும் பாதை

போதைப்பழக்கம், இளைய தலைமுறையினரை பேதைகளாக மாற்றிவருகிறது; எதிர்காலத்தை தொலைக்கின்றனர்; குடும்பத்தினரையும் நிர்க்கதியாக்குகிறது.'போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' என்ற நோக்கில் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி 'போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு, 'போதை பொருள் சந்தைக்கான சங்கிலியை உடைத்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை மற்றும் மீட்பு' என்ற கருப்பொருள் முன்வைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளிகள் நகரான திருப்பூரில் போதைப்பழக்கம் குறைந்தபாடில்லை.பெற்றோரே 'ரோல் மாடல்'போட்டி நிறைந்த உலகில், வாழ்க்கையில் மித மிஞ்சிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, யதார்த்தம் மறந்து, கற்பனை உலகில் மிதக்கும் இளைஞர்கள், அது, பூர்த்தியாகாத போது, விரக்தி மற்றும் நம்பிக்கையின்மையால் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். சமூக ஊடகங்களின் தாக்கம், சினிமாவில் நடிகர்களின் நடிப்பை பின்பற்றுதல், குழந்தைகளுக்கு 'ரோல் மாடல்' ஆக இருக்க வேண்டிய பெற்றோரோ, தங்கள் பிள்ளைகள் முன் போதைப்பொருள் பயன்படுத்துதல் ஆகியன போதைப்பழக்கம் அதிகரிக்க காரணங்களாக அமைகின்றன. போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை, வீடு, பள்ளி, கல்லுாரிகளில் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்; போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசும், கொள்கை முடிவெடுத்து சரியான முறையில் அமல்படுத்த வேண்டும்.- நம்பி, இயக்குனர், சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம்

ஒவ்வொருவருக்கும் பொறுப்பு

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம, நகர்ப்புறங்களில் பட்டி, தொட்டியெங்கும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும், கல்வி, சுகாதாரம், போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை, அரசு துறைகளுடன் இணைந்து நடத்தி வருகிறோம். 'போதைப்பொருட்கள் ஊடுருவியுள்ளது. பெட்டிக்கடை மற்றும் தனிநபர் மூலம் போதைப்பொருள் விற்பனை மறைமுகமாக நடக்கிறது' என்பதை அறிய முடிகிறது. போதைப் பொருள் விற்போர், கடத்துபவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்களை காக்க வேண்டிய பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.- சந்திராஒருங்கிணைப்பாளர், விழுதுகள் அமைப்பு

தீர்வு தரும் 'தோப்புக்கரணம்'

பழங்காலத்தில் நம் முன்னோரின் பழக்கத்தில் இருந்தது, 'தோப்புக்கரணம்' தான். தினமும், 21 முறை சரியான முறையில் தோப்புக்கரணம் செய்வதன் வாயிலாக, உடல், உணர்வு மற்றும் மனம் ஆகியவை சரிவர இயங்கும். இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் வாயிலாக நல்ல எண்ணம் வளரும், தீய எண்ணங்கள் மறையும். தோப்புக்கரணம் என்பது ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையல்ல; மாறாக, மனதை ஒருநிலைப்படுத்தும் பரிசு என்பதை உணர வேண்டும்.நம்மை அறியாமலேயே நம்மை நல்வழிப்படுத்தும். போதைப்பழக்கத்தை வெறுக்கும் மனநிலை கூட வரும். பெற்றோர் தான் நமக்கு உறுதுணை என்ற மனநிலை, மாணவர்கள் மத்தியில் வர வேண்டும். - மகேஸ்வரி, பயிற்றுனர்,சூப்பர் ப்ரைன் யோகா.

குடியில் குடிநோய் புகாதிருக்க வேண்டும்

மது நீரின்றி அமையட்டும் புது உலகு-------------------- இன்று (26.06.2025), போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் -

அர்த்தம் உள்ள மனிதராக்கலாம்

போதைக்கு அடிமையானவரைஅரவணைத்து மீட்க வேண்டும்மாணவர்கள் அதிகளவில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது, அவர்களின் மனம், உடல் மற்றும் சமூக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 'போதை வஸ்துகள், சந்தையில் எளிதாக கிடைக்கிறது' என, பெற்றோர் கூறுகின்றனர். போதைப்பழக்கத்தால் ஏற்படும் பின்விளைவு குறித்து அறிந்துகொள்ளாமல், இளைஞர்கள் அடிமையாகின்றனர். ஒரு கட்டத்தில் தங்கள் படிப்பு, இயல்பான குணம், குடும்ப பந்தம் ஆகியவற்றை உதறி தள்ளி, வீட்டில் இருந்து பணத்தை திருடிச் சென்று போதை பொருள் வாங்கும் மனநிலைக்கு வந்து விடுகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களில் கலந்துள்ள ரசாயனம், அவர்களை போதைக்கு அடிமைப்படுத்திவிடுகிறது. போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஆங்காங்கே நடத்தப்பட்டாலும், இனி, அதிகளவில் நடத்தப்பட வேண்டும். அதற்கு அடிமையானவர்களை ஒதுக்கி தள்ளாமல், அரவணைத்து மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்.- டாக்டர் பிரணவ், மனநல சிகிச்சை சிறப்பு மருத்துவர்---போதையை மறந்தால் பாதை தெளிவாகும்நம் நாட்டில், 15 முதல், 64 வயதுக்கு உட்பட்டவர்களில், 17 பேரில், ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்கிறது. ஐ.நா., சபை. போதைக்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும், மக்கள் நல்வாழ்வுத்துறை செய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், மருத்துவக்கல்லுாரியுடன், அரசின் மனநல திட்டம் செயல்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை, சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட பிற பரிசோதனைகள், இணை நோய்களுக்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. போதைப்பழக்கத்தை நிறுத்தும் முடிவில் உள்ளவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில் விடுபட முடியும். மனநல ஆலோசனை, போதை மீட்பு சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் உளவியல் ஆலோசனை பெற, 14416 அல்லது 104 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.- டாக்டர் சுகன்யா தேவி மாவட்ட மனநல மருத்துவர்.

விழிப்புணர்வு வாரம்

பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப்பழக்கம் தவிர்க்க செய்யும் நோக்கில், 23 முதல், 27ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 'என் எதிர்காலம், என் தேர்வு - போதைப்பொருள் வேண்டாம்' என சொல்லுங்கள்' என்ற தலைப்பில், 6 முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரிடையே வாசகம் எழுதும் போட்டி; தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களில் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்து கொள்கின்றனர் என்பதை விளக்கும் நாடகம்; ஆரோக்கியமான இயக்கம் மற்றும் உடல் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

6 மாதத்தில் 280 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்கவும், கண்டுபிடிக்கும் வகையிலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, மெத்தபெட்டமைன், ஹெராயின் போன்றவை சிக்கி வருகின்றன. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:போதை ஒழிப்பு விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் போதை பொருள் 'சப்ளை' குறித்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது என, இரு நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகிறோம். கடந்த, ஆறு மாதங்களில் 280 கிலோ கஞ்சா பிடிப்பட்டுள்ளது. இது அதிகமான பறிமுதல். இதை அழிக்கும் பணியை செய்கிறோம். இரு மாதம் முன்பு, 200 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பிடிபட்ட, 300 கிலோ அடுத்த வாரத்தில் அழிக்கப்பட உள்ளது. கஞ்சா தொடர்பாக, ஒன்பது பேர் மீது அபராதம் விதிப்பு, சிறையில் அடைத்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறிய அளவில் இருந்தால் அபராதம், அதற்கு மேல் இருந்தால் சிறை. அதேபோல், குட்கா விஷயத்தில், கடந்த ஆறு மாதங்களில், ஆயிரத்து, 100 கிலோ பிடிபட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை மூலம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கைது நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு தொடரும்.

இந்தப் பழக்கம் தொழிலை முடக்கும்

திருப்பூரில் சனிக்கிழமை தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. மதுப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஆண் தொழிலாளர் பலர், ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து திங்கள்கிழமையன்றும் விடுப்பு எடுப்பது வழக்கத்தில் உள்ளது. இதனால், தொழிலகங்களில் பணி முடங்கும் சூழல் நீடிக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைத் திருப்பூரில் குறைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தாலும், அரசின் செவிகளை அது சென்றடையவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை