திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நேற்று ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோடு முதல் நல்லுார் வரையில், ரோட்டின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கட்டடங்களுக்கு கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் இது குறித்த எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை கால அவகாசம் வழங்கி, ஆக்கிரமிப்பு அகற்ற கெடு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, உதவி கமிஷனர் ஜான் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் கவிதா முன்னிலையில், ஊழியர்கள் களம் இறங்கினர். காங்கயம் கிராஸ் ரோடு துவங்கி, ஒவ்வொரு கட்டடத்தின் முன்புறமும் இருந்த ஆக்கிரமிப்பு் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே அகற்றத் துவங்கினர். சில கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும், ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது போலீசார், எச்சரித்து அனுப்பினர். தொழிற்சங்கம் தரை மட்டம்திருப்பூர் கிளை அரசு போக்குவரத்து கழக அலுவலக வாயிலில் நெடுஞ்சாலை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து தொழிற்சங்கத்தினர் கொடிக்கம்பங்களும், தொழிற்சங்க அலுவலகங்களும் அமைத்திருந்தனர். ஆளும்கட்சியான தி.மு.க. வின் எல்.பி.எப். தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., - மற்றும் ஏ.டி.பி., ஆகியன அமைத்திருந்த தொழிற்சங்க அலுவலகங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதனையறிந்து ஓடி வந்த தொழிற்சங்கத்தினர் அலுவலகத்திலிருந்து பொருட்களை வெளியே எடுத்து பத்திரப்படுத்தினர். கொடிக்கம்பம், அறிவிப்பு பலகை ஆகியனவும் அகற்றப்பட்டது. அங்கு திரண்ட தொழிற்சங்க நிர்வாகிகளும், ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே தகவல் அளித்து, அவகாசம் வழங்கியும் அகற்றவில்லை என தெரிவித்து, பொக்லைன் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையின் அதிரடி நடவடிக்கையால் ஆக்கிரமிப்பாளர்கள் அரண்டு போயினர். கடும் நெருக்கடி மற்றும் எதிர்ப்புக்கு இடையே இதனை மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையை பலரும் பாராட்டினர். நேற்று காலை முதல் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால், காங்கயம் ரோட்டில் நீண்ட நேரம் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. நிழற்குடை அகற்றம் அப்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. அதன் சார்பில், பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடை அருகே மற்றொரு நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. அதனையும் நெடுஞ்சாலைதுறையினர் இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொங்கு வியாபாரிகள் நலச் சங்க தலைவர் சக்திவேல் தலைமையில் சிலர் அப்பகுதிக்கு வந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து, ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். கண்காணிப்பு அவசியம் திருப்பூர் நகரில் உள்ள மற்ற நெடுஞ்சாலை ரோடுகளிலும் பெருமளவு ரோட்டோர ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேபோல் தள்ளு வண்டி மற்றும் பிளாட்பாரக் கடைகளும் உள்ளன. சில இடங்களில் காலை முதலும், பல பகுதிகளில் மாலை முதல் இரவு வரையிலும், இவை செயல்படுகின்றன. இவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு மட்டும் நின்று விடாமல், மீண்டும் அவை ஏற்படாத வகையில் கண்காணிப்பதும் அவசியம்.