இழப்பை தியாகம் செய்து சாகுபடி; இயற்கை விவசாயிகள் ஆதங்கம்
பொங்கலுார் : 'இழப்பை தியாகம் செய்து தான் சாகுபடி செய்கிறோம்,' என இயற்கை விவசாயிகள் ஆதங்கப்பட்டனர். பொங்கலுார், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இயற்கை விவசாயிகள் சிலர் ஒருங்கிணைந்து இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்து வருகின்றனர். தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை சிவன் இயற்கை சந்தை என்ற பெயரில் பல்லடம், திருப்பூர் பகுதியில் சந்தை அமைத்து விற்பனை செய்கின்றனர். ராமேகவுண்டம்பாளையம் இயற்கை விவசாயி சுரேஷ் தோட்டத்தில் இயற்கை விவசாயிகள், நுகர்வோர் சந்திப்பு கூட்டம் நடந்தது. விவசாயிகள் பேசியதாவது:
இயற்கை விவசாயத்தில் சேதம் அதிகம். சில நேரங்களில், 90 சதவீதம் கூட இழப்பு ஏற்படுகிறது. இழப்பை தியாகம் செய்து தான் இயற்கை விவசாயம் செய்கிறோம். ரசாயனங்களை பயன்படுத்தியதால் நன்மை செய்யும் பூச்சிகள் குறைந்து போனது. தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்யும் பொழுது நன்மை செய்யும் பூச்சிகள் பெருகும். அதற்கு சில காலம் பிடிக்கும். நினைத்த காய் கிடைக்கவில்லையே என்று நுகர்வோர் வருத்தப்படக்கூடாது. சீசனில் கிடைக்கும் காய்களை வாங்கி பயன்படுத்த பழக வேண்டும். பாலிதீன் பிடியிலிருந்து வெளியில் வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கொடுவாய் ராமே கவுண்டம்பாளையத்தில் நுகர்வோர், இயற்கை விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. சிக்கிம் மக்கள் நஞ்சில்லா உணவை சாப்பிடுகின்றனர். அது நம் நாட்டிற்குள் தான் உள்ளது. அவர்களுக்கு கிடைப்பது நமக்கு கிடைப்பதில்லை. ரசாயனங்கள் விவசாயிகளுக்கு வலிந்து திணிக்கப்படுகிறது. நல்ல மண், காற்று வேண்டும். இதை யாரும் தர மாட்டார்கள். மொத்த உற்பத்தியில் நஞ்சில்லா உணவு ஒரு சதவிகிதம் கூட நுகர்வோருக்கு கிடைப்பதில்லை. நம்மை சூழ்ந்து இருப்பது அரசியல். மண்ணையும், நீரையும் பாதுகாப்பவரை தேர்வு செய்ய வேண்டும். - ஈசன் முருகசாமி, நிறுவனத் தலைவர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர்.